கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழை இருதரப்பிலும் அங்கீகரிப்பது தொடர்பில் இணைந்து பணியாற்றுவதன் சாத்தியம் குறித்து சிங்கப்பூரும் நியூசிலாந்தும் கலந்து ஆலோசித்து உள்ளன.
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இது பற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த இணையம் வழி சந்திப்பின் போது சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான அணுக்க உறவை இரு அமைச்சர்களும் மறுஉறுதிப்படுத்தினர். இரு நாடுகளும் தங்களுக்கான தடுப்பூசித் திட்டங்களைத் தொடங்கி இருக்கும் வேளையில் அனைத்துலகப் பயணத்தை மீண்டும் தொடங்குவதில் தடுப்பூசி சான்றிதழ்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
அண்மையில் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்த கருத்தை எதிரொலிக்கும் வகையில் டாக்டர் விவியன் இவ்வாறு தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழை இருதரப்பிலும் அங்கீகரிப்பது தொடர்பாக மற்ற நாடுகளுடன் சிங்கப்பூர் பேசி வருவதாகவும் உலகளவிலான பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கான அவசியமான நடவடிக்கை இது என்றும் சென்ற மாதம் திரு லீ தெரிவித்து இருந்தார்.
அறிவார்ந்த தேச நடவடிக்கைக்குப் பொறுப்பு வகிப்பவருமான டாக்டர் விவியன் சென்ற மாதம் கூறுகையில், ஒருவரின் தடுப்பூசி நிலையையும் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளையும் உள்ளடக்கிய மின்னிலக்கச் சான்றிதழ்கள் போன்ற சுகாதார ஆவணங்களின் எல்லை
கடந்த சரிபார்த்தலுக்கான உலகத் தரநிலையை சிங்கப்பூர் உருவாக்கி இருப்பதாகச் சொல்லி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இம்மாதத் தொடக்கத்தில், ஐஏடிஏ எனப்படும் 'அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் பயண அட்டை' என்னும் கைபேசிச் செயலியை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சோதித்துப் பார்த்தது.
பயணிகளின் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளையும் தடுப்பூசி நிலையையும் சரிபார்க்கும் வசதி கொண்டிருக்கும் அந்தச் செயலியை சோதித்துப் பார்த்த முதல் விமான நிறுவனம் அது.

