கிட்டத்தட்ட பாதிப்பேரிடம்
சரியான தகவல் முறை இல்லை
சரியான தகவல் முறையைக் குறிப்பிடும்
தகவல் சுகாதாரம் பற்றி சிங்கப்பூரில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளது. '2021 எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டர்' என்னும் தலைப்பிலான அந்த ஆய்வு ஐந்தில் ஒருவருக்கும் குறைவான சிங்கப்பூரரே நல்ல தகவல் சுகாதார முறையைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. தாங்கள் கண்ட சுவாரசியமான தகவலைப் பரப்புவதில் பலரும் உடன்பாடு கொண்டிருப்பதாகவும் ஆய்வறிக்கைக் குறிப்பிடுகிறது.
சரியான தகவல் முறை பின்பற்றப்படுவது குறித்து அறிய நான்குவித அளவீடுகளை ஆய்வு பயன்படுத்தியது.
தொடர்ந்து செய்தியில் ஈடுபாடு கொள்கிறார்களா, வெவ்வேறு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்களா, தகவல்களைச் சரிபார்க்கிறார்களா, சரியானதுதானா என்று அறியப்படாத தகவலை பரப்பிவிடாமல் தவிர்க்கிறார்களா - என்ற அளவீடுகள் அவை. இவற்றில் மூன்று அல்லது அதற்கு மேல் உள்ள அளவீடுகளை நல்ல முறையில் கொண்டிருப்பவர்களே சரியான தகவல் சுகாதாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என கணிக்கப்பட்டது. ஆனால், 46 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் ஓர் அளவீடு அல்லது பூஜ்யம் அளவீட்டைக் கொண்டிருப்பது ஆய்வில் தெரிய வந்தது. அதாவது, இவர்கள் சரியான தகவல் அல்லது தகவலைக் கையாள்வதில் சுகாதாரமான நிலையைக் கொண்டிருக்கவில்லை என்பது அதன் பொருள்.
53 தனியார் பாலர் பள்ளி குழந்தைகளுக்கு உதவ பயிற்சி
இளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய புதிய திட்டத்தின்கீழ் 53 தனியார் பாலர் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 150 அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இளவயதுக் குழந்தைகளின் வளர்ச்சித்திறனுக்குத் தேவைப்படும் அம்சங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முன்கூட்டியே உதவுவதற்கான பயிற்சிகள் ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு அளிக்கப்படும். அதன் தொடக்கமாக பாலர் பள்ளி முத்திரை தாங்கிய ஆறு பள்ளிகள் சிறப்புப் பராமரிப்பு நடவடிக்கையைத் தங்களது மையங்களில் தொடங்கிவிட்டன. 'பிசி பீஸ் ஏஷியா' என்னும் அமைப்பின்கீழ் இவை இயங்குகின்றன. 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பாலர் பள்ளி வருகைகளின் அடிப்படையில், ஒவ்வொரு மையத்திலும் 3 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரையிலான குழந்தைகளுக்கு வளர்ச்சிக்கான தேவை இருந்தது தெரிய வந்தது. வளர்ச்சித் தேவை என ஒரு குழந்தை அடையாளம் காணப்பட்டால் அந்தக் குழந்தையின் ஆசிரியருக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. அவருக்கு உதவ ஒரு குழு சென்று, குழந்தையின் நிலையை ஆராய்ந்து அதற்கான உத்திகளை ஆசிரியருக்குத் தெரிவிப்பர். இது இப்போதைய நிலை. புதிய திட்டத்தின்கீழ் ஆண்டிறுதியில் பள்ளி அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு பள்ளியிலும் முன்கூட்டி தலையிட்டு உதவக் கூடிய சிறப்பு அலுவலர்கள் இருப்பர். தீர்வுகளையும் உத்திகளையும் கையாளும் திறனை அவர்கள் பெற்றிருப்பர்.

