துளையிட்டு உறுப்பைப் பெறும் முறை காரணமாக தழும்பும் சிறியதாக இருக்கும்
சிங்கப்பூரில் கல்லீரல் நன்கொடையில் புதிய ஒரு முன்னோடி தொழில்நுட்பம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் கொடையாளர்களுக்கு வலி குறையும். அவர்கள் விரைவில் குணமடையலாம். உடலில் தழும்பும் சிறியதாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒருவரின் உடலில் இருந்து கல்லீரலை நன்கொடையாகப் பெறுவதற்கு வழிவழியாகப் பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை முறை மூலம் நன்கொடையாளரின் உடலில் 20 முதல் 25 செ.மீ. வரை நீண்ட தழும்பு ஏற்படும்.
இதனால் நன்கொடையாளர்கள் பலரும் தயங்குவதுண்டு.
ஆனால் இப்போதைய புதிய முறைப்படி கல்லீரல் நன்கொடையாளர்கள் அதிகம் பேர் முன் வருவார்கள் என்பதால் பல உயிர்களையும் காக்க முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
புதிய வகை துளையீட்டு சிகிச்சை முறை மூலம் நன்கொடையாளரின் உடலில் 5 செ.மீ. முதல் 7 செ.மீ. நீண்ட தழும்பே இருக்கும். உறுப்பு மாற்று சிகிச்சைக்கான தேசிய பல்கலைக்கழக நிலையத்தில் கல்லீரல் உறுப்பு மாற்று பிரிவில் மூத்த ஆலோசகராக இருக்கும் இணைப் பேராசிரியர் ஆல்ஃபிரட் கோ, இந்தப் புதிய முறை பற்றி தென்கொரியாவில் பயின்று வந்து இங்கு அதை அறிமுகப்படுத்தினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் 2017 நவம்பர் முதல் இவருடைய குழு இத்தகைய 15 உறுப்பு மாற்று சிகிச்சைகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்ஹெல்த் டியூக்-என்யுஎஸ் உறுப்பு மாற்று நிலையத்தில் 2019 மார்ச்சில் இத்தகைய துளையீட்டு முறையிலான நன்கொடை சிகிச்சை முதன்முதலாக இடம்பெற்றது.
இந்தப் புதிய முறை வெற்றிகரமானது என்று மேன்மேலும் அறி யப்படும்போது மேலும் பலர் கொடை வழங்க முன்வருவார்கள் என்று நம்புவதாக பேராசிரியர் கோ கூறினார். சென்ற ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி கல்லீரலைப் பெறுவதற்கு 45 பேர் காத்திருந்தனர்.
கல்லீரலைத் தானமாகப் பெற ஒருவர் ஏறக்குறைய 20 மாதம் காத்திருக்க வேண்டிய நிலை இங்கு இருக்கிறது.
புதிய துளையீட்டு நன்கொடை முறைக்கு கொடையாளர்களில் ஏறத்தாழ 10 முதல் 20 விழுக்காட்டினரே தகுதி பெறுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

