எண்ணெய் கப்பல் ஒன்றில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் கப்பல் திசை திருப்பும் கருவியைப் பொருத்திக்கொண்டு இருந்தபோது அது கீழே விழுந்துவிட்டதால் காய மடைந்த கப்பல் பட்டறை ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார்.
அந்த 59 டன் எடையுள்ள அந்தக் கருவியைக் கப்பலுடன் இணைக்கும் கொக்கி ஒன்று கழன்றுவிட்டதை அடுத்து அது கீழே விழுந்தது.
அந்தக் கருவி, எடை வரம்பைவிட 24 டன் அதிக எடையுடன் இருந்தது.
கெப்பல் கப்பல் பட்டறையில் 'சிட்டி ஆஃப் ஷங்காய்' என்ற எண்ணெய் கப்பலில் பழுதுபார்ப்புப் பணிகளைச் செய்துகொண்டிருந்த மன்தீப் குமார், 36, என்ற ஊழியர் மீது அந்தக் கருவி விழுந்ததால் அவர் நிலை தடுமாறிவிட்டார்.
அவருடைய வலது கரம் துண்டிக்கப்பட்டது. கப்பல் திசை திருப்பும் கருவி விழுந்ததன் விளைவாக அந்த ஊழியரின் இதயம் செயலற்று நின்றது. அவர் மாண்டுவிட்டதாக அதே இடத்தில் அறிவிக்கப்பட்டது. மியா முகம்மது மாசும் என்ற மற்றோர் ஊழியரும் அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டார். என்றாலும் அவருக்கு மோசமான காயங்கள் ஏற்படவில்லை.
இந்த வழக்கை விசாரித்த அரசாங்க மரண விசாரணை நீதிபதி மார்வின் பே, ஊழியர் மன்தீப் மரணமடைந்த சம்பவம், சோகமான துரதிஷ்டவசமான தொழில்துறை சம்பவம் என்று குறிப்பிட்டார்.
கனரக தொழில்துறையில் உள்ளவர்கள், தங்கள் துறை தொடர்பான ஆபத்துகளை நன்கு புரிந்துகொண்டு அவற்றைத் தடுத்துக்கொள்ள எப்போதுமே ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இதனிடையே, மனிதவள அமைச்சு அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

