இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் நாட்டின் சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் புத்தாக்கம் மிகவும் அவசியம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் ஈராண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் 'லீ குவான் இயூ உலகத் தொழில் திட்டப் போட்டி'யின் வெற்றியாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இறுதிச் சுற்றுக்கு மொத்தம் எட்டுப் போட்டியாளர்கள் தேர்வான நிலையில், 'ஐட்டரேட்டிவ் ஸ்கோப்ஸ்', 'ரிலெக்ட்ரிஃபை' எனும் இரு நிறுவனங்கள் தத்தம் பிரிவுகளில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன. அவ்விரு நிறுவனங்களுக்கும் தலா $250,000 மதிப்பிலான பரிசுகள் கிடைத்தன.
'அறிவார்ந்த, நீடித்து நிலைக்கத்தக்க, மீள்திறன்மிக்க நகரங்களைக் கட்டமைத்தல்' எனும் கருப்பொருளுடன் இடம்பெற்ற இப்போட்டி, 60 நாடுகளைச் சேர்ந்த 650 பல்கலைக்கழகங்களில் இருந்து 850 புத்தாக்கப் படைப்புகளை ஈர்த்தது.
மெய்நிகர் முறையில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய துணைப் பிரதமர் ஹெங், "இந்த நூற்றாண்டில் ஆக மோசமான நோய்ப் பரவலை இப்போது நாம் எதிர்கொண்டு இருக்கலாம் என்றாலும், எதிர்பாராத புத்தாக்க காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், கொரோனா கிருமியை வெற்றிகொள்ளவும் அதன்பின் வலிமையாக மீண்டெழவும் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் திறனும் புத்தாக்கத் திறனும் மிக முக்கியம்," என்றார்.
மின்னிலக்கமயமாதலின் வேகத்தை கொவிட்-19 தொற்று முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த கட்ட வளர்ச்சியின்போது, புத்தாக்கத்திலும் பங்காளித்துவங்களிலும் மிகுந்த கவனம் செலுத்துவோம் என்றும் திரு ஹெங் சொன்னார்.
திரு சித்தார்த் ஜாதவ் என்பவரால் தொடங்கப்பட்ட 'பாலிபீ' எனும் தொழில்முனைப்புக் குழுவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. உள்ளரங்கில் அதிகமாக வளர்க்கப்படும் ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, மிளகு, கத்தரிக்காய் போன்ற செடிகளில் தானாக இயங்கும், ஆளில்லா சிறுவானூர்திகளைப் பயன்படுத்தி மகரந்தச் சேர்க்கை இடம்பெறும் முறையை அக்குழு உருவாக்கி இருக்கிறது.
"கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மேற்கொள்ளப்படும் வேளாண்மையில் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு விரிவான, துல்லியமான தோட்டக்கலை சேவையை உருவாக்குவதே எங்களுடைய இலக்கு," என்றார் திரு சித்தார்த்.

