நீ சூன் சவுத் பகுதியில் வசிக்கும் குறைந்த வருவாய் குடும்பங்களைச் சேர்ந்த ஆடவர்கள் வேலை பெறவும் மனநலன் உள்ளிட்ட பல பிரச்சினைகளைச் சமாளிக்கவும் உதவியாக லாபநோக்கற்ற ஓர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி கேரி டான் யோசனையின் விளைவாக அமைக்கப்பட்டுள்ள 'ரைஸ் சமூகம்' (Rise Community) என்ற அந்த அமைப்பு, ஆடவர்களின் நலனில் ஒருமித்த கவனம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள முதல் அமைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈசூனில் செயல்படும் மக்கள் செயல் கட்சியின் நீ சூன் சவுத் கிளையில் அந்த அமைப்பு நேற்று தொடங்கப்பட்டது. மீள்திறன், ஒற்றுமை, பலம், சக்தி ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் அந்த அமைப்புக்கு 'ரைஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சக ஆதரவுக் குழுக்கள் மூலமாகவும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியும் அந்த அமைப்பு மனம், உடல், நிதி ரீதியில் ஆடவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த பாடுபடும்.
தொடக்கமாக இரண்டு ஆண்டு முன்னோடித் திட்டம் தொடங்கும். அது, நீ சூன் சவுத்தில் வசிக்கும் 20 முதல் 59 வரை வயதுள்ள ஆடவர்களை எட்ட வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளது.
ரைஸ் சமூகம் அமைப்பு, சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் இப்போது ஏறத்தாழ 50 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
சட்ட, உள்துறை அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கா சண்முகம், புதிய அமைப்பின் புரவலராக இருப்பார்.
புதிய அமைப்பின் ஊழியர்களும் உறுப்பினர்களும் சமூக அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு ஆடவர்களுக்கான செயல்திட்டங்களை உருவாக்குவார்கள்.
குறைந்த வருவாயைக் கொண்டுள்ள மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வழிகளைத் திருத்தி அவர்கள் சீரமைப்பார்கள்.