கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடம் இருந்து வரும் உணவு விநியோகக் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக ஜாமியா சிங்கப்பூரின் உணவு வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் இருப்பு குறைந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நன்கொடை உதவி நாடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் இணையம் வழியாக நன்கொடை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பங்கீட்டு உதவி கேட்டு அந்த உணவு வங்கியை கடந்த டிசம்பர் மாதம் 886 குடும்பங்கள் அணுகின.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் அது 79 விழுக்காடு அதிகரித்திருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த மாதம் 920 ஆக அதிகரித்துவிட்டது. பொருளியல் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தாலும் இந்த ஆண்டு மேலும் பல குடும்பங்கள் உதவி கேட்டு தங்களை அணுகக்கூடும் என்று ஜாமியா சிங்கப்பூரின் தலைமை செயல்பாட்டு அதிகாரியும் தலைமைச் செயலாளருமான திரு ஜாஃபர் மைதீன் கூறினார்.