பரந்த விரிந்த சமூகத்தில் 'டௌன் சிண்ட்ரோம்' எனப்படும் மனநலிவுற்றோரைச் சிறந்த முறையில் ஒருங்கிணைக்க சமூகம் ஒன்றுதிரள வேண்டிய அவசியம் உள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் வலி
யுறுத்தி உள்ளார்.
"மனநலிவு குறைபாடு உள்ளோரை ஆதரிக்கும் பாதுகாப்பான இல்லமாக சிங்கப்பூரை உருவாக்க அத்தகையோருக்கு நமது துடிப்பான பங்கேற்பு தேவைப்படுகிறது," என்று தெரிவித்துள்ளார் இரண்டாம் சட்ட அமைச்சருமான திரு டோங். உலக 'டௌன் சிண்ட்ரோம்' தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் 'டவுன் சின்ரோம்' சங்கம் (டிஎஸ்ஏ) கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஜங்ஷன் 8 கடைத்தொகுதி யிலுள்ள சங்க அலுவலகத்தில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகள் இணையம் வழி நேரலையாகக் காட்டப்பட்டன.
இது தொடர்பான இதர கொண்டாட்ட அம்சங்கள் கொவிட்-19 சூழல் காரணமாக மெய்நிகர் வடிவில் இடம்பெற்றன. குரோமோசோம் 21 எனப்படும் நிறமியை மும்மடங்குக் கூடுதலாகப் பெற்று பிறக்கும் குழந்தை மனநலிவுறுகிறது. அதனைக் குறிக்கும் வகையில் மார்ச் 21ஆம் தேதி உலக 'டௌன் சிண்ட் ரோம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் கூடுதல் நிறமி 21 மூளை வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடியது. 800 பேரில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு இருக்கும். சிங்கப்பூரில் 2006ஆம் ஆண்டு முதல் 'டௌன் சிண்ட்ரோம்' தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இப்போது 16வது ஆண்டாக நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் டோங், மனநலிவுற்றவர்கள் எதிர்நோக்கும் சவால்
களை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அது தொடர்பான அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சமூகத்தில் மனநலிவுற்றவர்களை அங்கீகரித்து அவர்களைக் கொண்டாடுவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளில் சிங்கப்பூர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
டிஎஸ்ஏ தலைவர் ரத்னசபாபதி சிவானந்தம் கூறுகையில், "சிறப்புத் தேவையுள்ளோரை அரவணைக்கும் சமூகமாக சிங்கப்பூர் ஆகிவிட்டதைத் தொடர்ந்து நமது மன
நலிவுற்ற உறுப்பினர்கள் பலரின் திறன்களை வளர்ப்பதற்கான ஊக்கம் கிடைத்து உள்ளது," என்றார்.

