சமயத் தீவிரவாத சிந்தனை இளையர்களிடம் ஏற்படாமல் தடுப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கமுடியும். வீட்டில் பிள்ளைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பதன் மூலமும் மனம்விட்டுப் பேசுவதை வளர்ப்பதன் மூலமும் பெற்றோர்கள் இதனைச் செய்ய முடியும்.
இதுபோன்ற ஆலோசனைகள் நேற்று நடந்த பிள்ளைவளர்ப்பு கருத்தரங்கில் வெளிப்பட்டன.
வடக்கு பள்ளிவாசல் குழுமம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பங்கேற்ற நிபுணர்கள் இதுபோன்ற பரிந்துரைகளை அளித்தனர்.
இளையர்களிடம் நல்லிணக்கத்தை வளர்த்தல் என்னும் பொருளில் இணையம் வழியாக இந்
நிகழ்வு நடத்தப்பட்டது.
சமயத் தீவிரவாதப் போக்கின் அறிகுறிகளைக் கண்டறிந்து அவற்றை முன்கூட்டியே தடுக்கும் வழிகள் தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர்களிடமும் இளையர்களிடமும் ஏற்படுத்தும் நோக்கில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
உட்லண்ட்ஸிலுள்ள யூசோஃப் இஷாக் பள்ளிவாசல், செம்பவாங்கில் உள்ள அசையஃபா பள்ளிவாசல் ஆகியனவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பள்ளிவாசல் குழுமத்தில் அடங்கும்.
இவ்விரண்டு பள்ளிவாசல்களையும் தாக்கும் இலக்கு கொண்டிருந்ததாக 16 வயது இளையர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் தடுத்து வைக்கப்பட்டார்.
கருத்தரங்கில் கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது.
தங்களது உணர்வுபூர்வமான தகவல்களைப் பிள்ளைகளிடம் பெற்றோர் எவ்வாறு விவாதிக்க முடியும், தவறான செயல்களிலும் இணையத்தில் சமயத் தீவிரவாதத் தகவல்களைப் பெறுவதிலும் பிள்ளைகள் ஈடுபடவில்லை என்பதை அறிவது எவ்வாறு - என்பன போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
"இளையர்களின் கவலைகளைக் கவனிக்க நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தில் செல்லும்போது, காரில் பயணம் செய்யும்போது, தொலைக்காட்சி பார்க்கும்போது, சாப்பிடும்போது என்று நேரத்தை ஒதுக்கி அவர்களைக் கவனிக்க வேண்டும். வாய் வார்த்தை மட்டுமே தொடர்புமுறையாக அமையாது. செய்கைகளையும் கவனிக்க வேண்டும்," என நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.

