குற்றச்செயல்களுக்காக சிறைத் தண்டனை பெற்றவர்களின் பிள்ளைகளும் சட்டப் பிரச்சினையில் சிக்கும் வாய்ப்பு இருக்கக்கூடும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 'சிங்கப்பூரில் தலைமுறை
களுக்கு இடையிலான குற்றப் பரவலைப் புரிந்துகொள்ளுதல்' என்னும் தலைப்பிலான அந்த ஆய்வு சுமார் 94,000 பெற்றோர்களிடமும் அவர்களின் 183,000 குழந்தைகளிடமும் நடத்தப்பட்டது.
சிறைத் தண்டனை பெற்றவர்
களின் பிள்ளைகள் குற்றம் புரிந்து சிறை செல்வதற்கான வாய்ப்பு தண்டனை பெறாதவர்களின் பிள்ளைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.
அதாவது, தந்தை தண்டனை பெற்றிருந்தால் அவரது பிள்ளை சிறை செல்லும் வாய்ப்பு 2.7 விழுக்காடும் தாய் தண்டனை பெற்றிருந்தால் அவரது பிள்ளை சிறை செல்லும் வாய்ப்பு 3.7 விழுக்காடும் அதிகம் இருப்பது தெரிய வந்தது.
ஆய்வில் பங்கேற்ற தந்தைமார்களில் ஐவரில் ஒருவரும் தாய்மார்களில் 20ல் ஒருவரும் அவர்கள் புரிந்த குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள். மேலும், மூன்றில் இரு பெற்றோர்கள் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான குற்றச்செயல்கள் புரிந்தவர்கள். ஆய்வில் பங்கேற்ற பிள்ளைகளில் 2 விழுக்காடு குற்றப் பின்னணி உடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் சமூக சேவைக்கான தேசிய மன்றமும் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானோரிடம் விரிவான முறையில் நடத்தப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் 'சண்டே டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறினார். ஆய்வில் பங்கேற்ற பெற்றோர்கள் 1965, 1970. 1975, 1980, 1985 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள். அவர்களில் 41,683 பேர் தந்தையர்; 52,146 பேர் அன்னையர். அதேபோல ஆய்வில் கருத்துக் கூறிய குழந்தைகளின் வயது கடந்த ஆண்டு நிலவரப்படி 7க்கும் 39க்கும் இடைப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் பெற்றோரின் குற்றச் செயல்பாடு அவர்களின் குற்றச் செயல்பாட்டில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காகவே ஆய்வு நடத்தப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

