'கவுண்ட் ஆன் மி சிங்கப்பூர்' என்னும் சிங்கப்பூர் தேசிய தினப் பாடல் தொடர்பான பதிப்புரிமை விவகாரத்தில் எதிர்பாரா திருப்பம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பாடலின் சாயலில் 'வி கேன் அச்சீவ்' என்ற பெயரில் ஒரு பாடலை இசையமைத்துப் பயன்படுத்தி வந்த ஜோசஃப் மெண்டோசா (படம்) என்னும் இந்தியாவின் இசையமைப்பாளர் பாடலுக்கு உரிமை கொண்டாடும் முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு நேற்று தனது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.
'கவுண்ட் ஆன் மி சிங்கப்பூர்' பாடலும் 'வி கேன் அச்சீவ்' பாடலும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக ஒலித்தது. பாடல்களில் சிங்கப்பூருக்குப் பதிலாக 'இந்தியா' அல்லது 'மதர் இந்தியா' என்ற வார்த்தை மட்டும் மாறி இருக்கிறது.
இதனை அறிந்ததும் விசாரணையில் இறங்கியது அமைச்சு. ஆனால், சிங்கப்பூர் பாடல் பற்றி ஒருசில நாட்களுக்கு முன்னர்தான் தமக்குத் தெரியும் என்றும் தமது பாடல் 1983ல் எழுதப்பட்டது என்றும் அதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் திரு மெண்டோசா கூறி வந்தார்.
இருப்பினும் 'வி கேன் அச்சீவ்' என்னும் அவரது பாடலின் உரிமையை வைத்திருக்கும் 'பாவ்லின் இந்தியா' என்னும் கிறிஸ்துவ இசை நிறுவனம் அந்தப் பாடல் சிங்கப்பூரின் தேசிய கீதத்தின் தழுவல்தான் என ஒப்புக்கொண்டுவிட்டதாக அண்மையில் அமைச்சு கூறி இருந்தது. இதற்குப் பின்னரும் தொடர்ந்து முரண்டுபிடித்து வந்த திரு மெண்டோசா தற்போது அந்தப் பாடல் தம்முடையதுதான் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி உள்ளார். எனவே, 'கவுண்ட் ஆன் மி சிங்கப்பூர்' பாடலின் வரிகளுக்கோ இசைக்கோ தாம் உரிமை கொண்டாடப்போவதில்லை என அவர் கூறிவிட்டதாக அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
"எந்த ஒரு நிபந்தனையுமின்றி உரிமை கோரலை திரு மெண்டோசா மீட்டுக்கொண்டுவிட்டார். மேலும் 'வி கேன் அச்சீவ்' பாடலை எல்லா சமூக ஊடகத் தளங்களில் இருந்தும் நீக்கிவிட அவரது உதவி யாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்," என அமைச்சின் பதிவு குறிப்பிட்டுள்ளது.

