உணவுத் தேவைக்கு நன்கொடை நாடுகிறது ஜாமியா சிங்கப்பூர்
கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடம் இருந்து வரும் உணவு விநியோகக் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக ஜாமியா சிங்கப்பூரின் உணவு வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் இருப்பு குறைந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நன்கொடை உதவி நாடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இணையம் வழியாக நன்கொடை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பங்கீட்டு உதவி கேட்டு அந்த உணவு வங்கியை கடந்த டிசம்பர் மாதம் 886 குடும்பங்கள் அணுகின. ஆண்டுக்காண்டு அடிப்படையில் அது 79 விழுக்காடு அதிகரித்திருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த மாதம் 920 ஆக அதிகரித்துவிட்டது. பொருளியல் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தாலும் இந்த ஆண்டு மேலும் பல குடும்பங்கள் உதவி கேட்டு தங்களை அணுகக்கூடும் என்று ஜாமியா சிங்கப்பூரின் தலைமை செயல்பாட்டு அதிகாரியும் தலைமைச் செயலாளருமான திரு ஜாஃபர் மைதீன் கூறினார்.
ஓட்டுநர் தடுப்பூசிக்கு வரவேற்பு
மலேசிய சரக்கு வாகன ஓட்டுநர்கள் சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வர்த்தக தொழில் அமைச்சு நேற்று கூறியது. மலேசிய ஓட்டுநர்களும் அவர்களோடு இருப்போரும் நேற்று முன்தினம் முதல் சிங்கப்பூரில் ஃபைசர்பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற்று வருகின்றனர். இதற்காக பூன் லே, உட்லண்ட்ஸ் ஆகிய இரு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சோதனைச் சாவடிகளின் அருகில் இவை அமைந்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு அந்த மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடாத ஓட்டுநர்களும் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் கொவிட்-19 தொடர்பான இதர எல்லை சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டும்.

