பேரதிர்ச்சி காரணமாக மனதளவில் ஏற்படும் பாதிப்பால் துன்பப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 30 விழுக்காடு அதிகரித்திருப்பதாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனையைச் சேர்ந்த உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 210 சிறுவர்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சாலை விபத்து, பாலியல் துன்புறுத்தல், பள்ளியில் மற்ற மாணவர்களால் துன்புறுத்தப்படுவது, குடும்ப வன்முறை, அன்புக்குரியவர்களின் இறப்பு போன்ற பாதிப்புகளை இந்தச் சிறுவர்கள் அனுபவித்திருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறினர்.
தகுந்த ஆதரவின்றி இத்தகைய பாதிப்புகள் எதிர்காலத்தில் பதற்றம், மனஅழுத்தம் போன்ற மனநலப் பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும் என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் முதன்மை உளவியல் நிபுணர் திருவாட்டி ஜெமி சென் இன்று தெரிவித்தார்.
மூன்று வயதிலிருந்து 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும், அனைத்து வயது பெண்களுக்கும் உளவியல் சேவைகளை வழங்குவதாக அவர் கூறினார்.
மனநலப் பாதிப்புகள் அதிகரித்திருப்பதற்கு கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமா என்பது குறித்து உறுதியாகக் கூறமுடியாது என அவர் தெரிவித்தார்.

