தமது வேலை நிலை குறித்து அதிகாரிகளிடம் பொய்யுரைத்து கொவிட்-19 நிவாரண நிதியைப் பெற்ற ஆடவருக்கு நேற்று ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி $500 பெற்றுக்கொண்ட முகம்மது ஃபைசல் காலித், 37, (படம்) இரண்டாவது முறை வேறொரு மானியத்திற்கு விண்ணப்பித்தபோது இவரது ஏமாற்று வேலை வெளிச்சத்திற்கு வந்தது. மோசடி புரிந்ததாக ஒரு குற்றச்சாட்டையும் மோசடி புரிய முயற்சியில் ஈடுபட்ட மற்றொரு குற்றச்சாட்டையும் இவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ஃபைசலுக்கு நேற்று தண்டனை விதித்து பேசிய மாவட்ட நீதிபதி ஜஸ்வீந்தர் கோர், கொவிட்-19 நிவாரணத் திட்டங்களை ஃபைசலை போல மற்றவர்களும் தவறுதலாக பயன்படுத்துவதைத் தடுக்க எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.
நிர்வாகப் பணியாளர் வேலையிலிருந்து 2019 செப்டம்பரில் ஃபைசல் தாமாக விலகியதாக அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர் நிக்கலஸ் லிம் தெரிவித்தார். தாம் குற்றங்கள் புரிந்த சமயத்தில் ஃபைசல் வேலையின்றி இருந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் 'தற்காலிக நிவாரண நிதி'க்கு விண்ணப்பித்த ஃபைசல், கொவிட்-19 சூழல் காரணமாக தமது வேலையை இழந்துவிட்டதாக பொய்யுரைத்தார்.
தாம் முன்னதாக பணிபுரிந்த நிறுவனத்தின் பெயரை நகல் செய்து தாம் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக போலி கடிதம் ஒன்றைத் தயார்செய்ததுடன் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களின் மின்னிலக்கக் கையொப்பங்களையும் ஃபைசல் நகல் செய்தார்.
இவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இவருக்கு $500 வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் கொவிட்-19 ஆதரவு மானியத்திற்கு ஃபைசல் விண்ணப்பித்தார். இந்த முறையும் விண்ணப்பத்தில் பொய்யுரைத்த இவர், மூன்று மாதங்களுக்கு மேலாக தாம் சம்பளமில்லா கட்டாய விடுப்பில் சென்றதாகக் கூறினார்.
அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகையைப் பெற தமது விண்ணப்பங்களில் ஃபைசல் பணிபுரிந்த முன்னாள் நிறுவனத்தின் பெயரையும் மின்னிலக்க கையொப்பங்களையும் இவர் தவறாகப் பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் போலிசிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஃபைசலின் ஏமாற்று வேலை கண்டறியப்பட்டது.
கொவிட்-19 ஆதரவு மானியத்திற்கான ஃபைசலின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அதிகாரிகள், ஃபைசல் சமர்ப்பித்து இருந்த ஆவணங்களில் மோசடி செய்திருப்பதைக் கண்டறிந்து இவரது விண்ணப்பத்தை நிராகரித்தனர். ஃபைசலின் விண்ணப்பம் ஏற்கப்பட்டிருந்தால், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இவருக்கு $2,400 வழங்கியிருக்கும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் தற்காலிக நிவாரண நிதியிலிருந்து தாம் பெற்றுக்கொண்ட $500ஐ அதிகாரிகளிடம் ஃபைசல் திருப்பித் தந்தார்.