மாணவர்களுக்குத் தொல்லை கொடுப்பதன் தொடர்பிலான மற்றொரு காணொளி இப்போது சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. இம்முறை அதில் சம்பந்தப்பட்டவர்கள் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் என்று நம்பப்படுகிறது.
‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளுக்கு இன்று கிடைத்த அந்தக் காணொளியில், கறுப்பு டி-சட்டை அணிந்துள்ள ஆடவர் கும்பல் ஒன்று, பள்ளிக் கழிவறையில் நிர்வாணமாக, ஒரு சுவருக்கு அருகில் அமர்ந்த நிலையில் உள்ள ஆடவர்கள் இருவர் மீது சிறுநீர் கழிப்பதைப் பார்க்க முடிகிறது.
எண் 535 கிளமெண்டி ரோடு எனும் முகவரியில் நடந்த இச்சம்பவம் பற்றி தங்களுக்கு நேற்று இரவு 9.50 மணிக்கு தகவல் கிடைத்தது என போலிசார் தெரிவித்தனர். அந்தக் காணொளி எப்போது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. அந்தக் காணொளியைக் கிட்டத்தட்ட 100 பேர் பார்த்திருக்கின்றனர். ஆனால், நேற்று இரவு அக்காணொளி சமூக ஊடகத்திலிருந்து அகற்றப்பட்டது.