பணியின்போது முஸ்லிம் தாதியர் தலையங்கி (துடோங்) அணிய அனுமதிப்பதை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக முஸ்லிம் தலைவர்களிடம் ஆறு மாதங்களுக்குமுன் தெரிவிக்கப்பட்டது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தாதியர் தலையங்கி அணிய விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்ய அனுமதிப்பதற்கான காரணங்களை அரசாங்கத்தால் புரிந்துகொள்ள முடிகின்றது என்றும் சமூகத்துடனும் மற்ற குழுக்களுடனும் ஆலோசித்தபின் அரசாங்கம் தனது முடிவை அறிவிக்கும் என்றும் அமைச்சர் சண்முகம் கூறினார்.
கேலாங் சாலையில் அமைந்துள்ள கதிஜா பள்ளிவாசலில் இன்று மூத்த முஸ்லிம் தலைவர்களுடனான கலந்துரையாடலின்போது திரு சண்முகம் இவ்வாறு பேசினார்.

