சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளில் நேற்று பிற்பகல் பெய்த கனமழையால் அப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு உள்ள சாலைகள் சிலவற்றில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியது.
பூன்லே வே, கார்ப்பரேஷன் சாலை, எண்டர்பிரைஸ் சாலை ஆகிய இடங்களில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
வாகனமோட்டிகளுக்கு உதவ அதன் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்ததாக கழகம் கூறியது.
வெள்ளம் காரணமாக பேருந்துச் சேவை எண் 252 எண்டர்பிரைஸ் சாலையிலிருந்து வேறு பாதைக்குத் திருப்பிவிடப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நேற்று மாலை 5.40 மணிக்கு அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது.
இதனால் ஒன்பது பேருந்து நிறுத்தங்களில் அந்த பேருந்து நிற்கவில்லை.
சிங்கப்பூரில் பல இடங்களில் நேற்று மாலை 4.15 மணிக்கும் 4.45 மணிக்கும் இடையே இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் மாலை 4 மணியளவில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.
மாலை 6 மணியளவில் வெள்ளநீர் பெரும்பாலும் வடிந்துவிட்டது. என்றாலும், இன்று பிற்பகல் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வாரியம் முன்னுரைத்துள்ளது.

