நீண்ட நேரம் காத்திருப்பது குறித்துப் புகார்கள் எழுந்ததை அடுத்து, முன்பதிவின்றி கடப்பிதழைப் புதுப்பிக்க வருவோரின் விண்ணப்பங்களை ஏற்பதை சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம் நிறுத்திவைத்துள்ளது.
இத்திடீர் அறிவிப்பால் நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்டவர்களால் தங்களின் கடப்பிதழ்களைப் புதுப்பிக்க முடியாமல் போனது.
இவர்களில் சிலர் நள்ளிரவு முதல் வரிசையில் நிற்கத் தொடங்கியதாக ஷின் மின் செய்தித்தாள் தெரிவித்திருந்தது. முன்பதிவு செய்யாமல் ஒரு நாளில் 30 பேர் மட்டுமே தங்களின் கடப்பிதழைப் புதுப்பிக்க நேரடியாக தூதரகத்திற்கு வர முடியும். ஆனால், இனி முன்பதிவு செய்தவர் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.
முன்பதிவு செய்வதற்கான இணையத்தளத்தை அணுகிய திருவாட்டி சின் என்பவர், மே 21 வரை முன்பதிவு செய்வதற்கான நாட்கள் இல்லை என்று தெரிவித்தார்.
சென்ற வியாழக்கிழமையன்று இவர் வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்த பின்னர், கணினிக் கட்டமைப்பில் கோளாறு என்று தூதரகம் கூறி அனுப்பியதாகக் கூறினார். மீண்டும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் வரிசையில் காத்திருந்த அவருக்கு, தூதரகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என்று 9.40 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.
தூதரகத்திடமிருந்து மின்னஞ்சலும் முன்பதிவும் இருந்தால் மட்டுமே தூதரகத்திற்குள் செல்ல முடியும் என்று கூறப்பட்டது.
வேலை அனுமதி அட்டை காலாவதியாதல், புதிய கடப்பிதழ் தேவைப்படுதல் போன்ற பிரச்சினைகளைக் கூறியோரிடம், அவற்றுக்குத் தூதரகம் பொறுப்பல்ல என்று கூறப்பட்டதாம்.
நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தூதரகத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்த மேலும் எட்டு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படவுள்ளதாகவும் மலேசியக் குடிநுழைவுத் துறை சென்ற சனிக்கிழமையன்று கூறியது.