சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) விடுதி ஒன்றிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் தொற்று ஏற்படுத்தக்கூடிய மரபணு மூலக்கூறு (கொவிட்-19 ஆர்என்ஏ) தடயங்கள் காணப்பட்டதால் அங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு அதிரடியாக கொவிட்19 சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இதற்காக நேற்று சிறப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டன.
மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கைத் தொலைபேசி, அடையாள அட்டை, மாணவர் அட்டை ஆகியவற்றுடன் வரிசையில் நின்று சோதனை செய்து கொண்டனர்.
'யுடவுன்' என்று அழைக்கப்படும் நார்த் டவர் இன் யூனிவர்சிட்டி டவுனில் 13 வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்தப் பட்டதாக என்யுஎஸ் தெரிவித்தது.
கொவிட்-19 சோதனை முடிவுகள் தெரியும் வரை வீட்டில் தங்கி இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வீடுகள் உள்ள இடத்தை சுற்றி தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'பிசிஆர்' சோதனையை செய்து கொள்வது அவசியம் என்று என்யுஎஸ் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு மூன்று நாட்களில் சோதனை முடிவு தெரியவரும். அந்த முடிவைப் பொருத்து அடுத்த நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். அதுவரை மாணவர்கள் இணையம் வழியாக வகுப்பறைப் பாடங்களில் பங்கேற்கலாம்.
குளியல் அறையைப் பயன்படுத்துவது, துணிகளைச் சலவைக்குப் போடுவது, உணவுகளைத் தருவிப்பது போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே மாணவர்கள் அறையைவிட்டு வெளியே செல்ல முடியும்.
என்யுஎஸ் இணையத் தளம் வழியாக நாளுக்கு இரண்டு முறை தங்களுடைய உடல் வெப்ப நிலையை மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். வெளிஆட்களைச் சந்திக்க அனுமதி கிடையாது என்று என்யு எஸ் குறிப்பிட்டது.
நார்த் டவரில் தங்கியுள்ள பெரும்பாலானோர் ெவளிநாட்டு மாணவர்கள். அவர்கள் முதுநிலைப் பட்டம் படித்து வருகின்றனர்.
சனிக்கிழமை காலை 11.00 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரியில் ஆற்றல் குறைந்த 'கொவிட்-19 ஆர்என்ஏ' தடயங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மாணவர்களுக்கு அவசர சுற்றறிக்கையை என்யுஎஸ் அனுப்பியது.

