சிங்கப்பூரில் குழாய் வேலை பார்ப்போர் (பிளம்பர்ஸ்) தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறவும் 10 ஆண்டு செயல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்திற்கு மாறுதல், இத்துறை வல்லுநர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட, புதிய பொருளியலுக்கு இத்துறையைத் தயார்ப்படுத்தும் வகையில், இத்துறையின் 10 ஆண்டு செயல்பாடு, தொழில்நுட்பம் குறித்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இத்துறையை மாற்றி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் பிரிவு சிங்கப்பூர் குழாய் வேலை சங்கத்துடனும் ஏழு சிறிய, நடுத்தர நிறுவனங்களுடனும் நேற்று கையெழுத்திட்டது.
இத்துறையின் ஊழியரணி மூப்படைந்து வரும் நிலையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஏறக்குறைய 900 உரிமம் பெற்ற குழாய் வேலை தொழிலர்கள் உள்ளனர்.
இவர்களில் முக்கால் வாசிப்பேர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று குழாய் வேலை சங்கத்தின் தலைவர் திரு டான் வீ டெக் நேற்றைய நிகழ்ச்சியில் கூறினார்.
"இது தொடர்ந்தால், சிங்கப்பூர் மக்களுக்குச் சேவையாற்ற போதிய குழாய் வேலை தொழிலர்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம்," என்றார் அவர்.
"இத்துறைக்கு இளையர்களை ஈர்ப்பது எளிதானதல்ல. "பாரம்பரியமாகவே குழாய் வேலை என்பது வாழ்க்கைத் தொழில் தேர்வாக இருப்பதில்லை. எவரும் இந்த வேலையைத் தேர்வு செய்வதில்லை. ஆனால், இந்தப் பொது மனப்பான்மையை மாற்ற வேண்டும்," என்று திரு டான் கூறினார்.
இத்துறையை மாற்றி அமைப்பதை விரைவுபடுத்துமாறு இத்துறையின் பங்காளிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
இதில் புதிதாக உரிமம் பெற்றவர் $4,000 வரை சம்பாதிக்கலாம். அனுபவம் உள்ளவர் $6,000 வரை சம்பளம் ஈட்டலாம். முறைப்படுத்தப்பட்ட தண்ணீர் சேவைகள், சுத்திகரிப்புப் பணிகளை பொதுப் பயனீட்டுக்கழகத்தின் உரிமம் பெற்றவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
குழாய் வேலைகளுக்கான கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை இன்மை, உரிமம் இல்லாதவர்கள் இத்துறையில் இருப்பதால் வேலை தரநிலைகளில் மாறுபாடு போன்ற சவால்களை இத்துறை எதிர்நோக்குகிறது.
புதிய செயல்திட்டத்தின் கீழ், நிறுவனங்களிடம் தொழில்நுட்பப் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், குழாய் வேலைகள், சுத்திகரிப்பு தொடர்பான படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பயிற்சிக் கழகத்தை அமைக்கவும், சிறந்த செயல்முறைகளுக்கான ஓர் ஆணையத்தை உருவாக்கவும் திட்டம் உள்ளது.
எதிர்கால குழாய் வேலை தொழிலர்களை உருவாக்க இந்த 10 ஆண்டு செயல் திட்டம் உதவும். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்கள் வேலையை மேலும் சிறப்பாகச் செய்ய முடிவதுடன், புதிய பொருளியலில் இந்தத் தொழிலை சாத்தியமானதாக வைத்திருக்க இயலும் என்று கூறினார் என்டியுசி பொதுச்செயலாளர் இங் சீ மெங்.
இந்த செயல் திட்டத்திற்கு ஒரு பாலமாகச் செயல்படுவதுடன், இத்துறையை நிபுணத்துவம் உடையதாக மாற்றுவதற்கு தேவையானவர்களை ஈடுபடுத்தும் பணியில் என்டியுசி கவனம் செலுத்தும். குழாய் வேலை செய்வோரை கிடைக்கும் வேலையைச் செய்வோர் பிரிவில் இணைக்கும் திட்டம் இல்லை.

