உதவி தேவைப்படும் குடும்பங்கள் இலவசமாகப் பொருள்களைப் பெற்றுச் செல்ல வாய்ப்பளிக்கும் விதமாக பூன் லே வட்டாரத்தில் சமூகக் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது.
புளோக் 176 பூன் லே டிரைவில் அமைந்துள்ள அக்கடையை 'ஃபுட் ஃபிரம் தி ஹார்ட்' எனும் அறநிறுவனம், ஓசிபிசி வங்கியின் ஆதரவுடன் நடத்துகிறது.
இலவசமாக வாங்கிச் செல்வது எனும் கோட்பாட்டின் அடிப்படையில் சமூகக் கடைகள் செயல்படுகின்றன. பயனாளிகள் அக்கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுச் செல்லலாம்.
வசதி குறைந்தோருக்கு முன்தயாரிக்கப்பட்ட அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்குவதற்குப் பதிலாக, இந்தக் கடை அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே தேர்வு செய்ய வழிசெய்கிறது. பயனாளர் ஒரு மாதத்தில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களில் 12 பொருட்களைத் தேர்வு செய்ய லாம்.
இந்தக் கடை தற்போது உதவி தேவைப்படும் 350 குடும்பங்களுக்குச் சேவையாற்றுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1,000 குடும்பங்களை எட்ட வேண்டும் என்பது இலக்கு. இது இரண்டாவது சமூகக் கடையாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மவுண்ட்பேட்டனில் ஒரு கடை திறக்கப்பட்டது.
தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூக சேவைகள், சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ நேற்று பூன் லே சமூகக் கடையை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
நன்கொடை உணவு பங்கீட்டை சிறந்த வழியில் ஒருங்கிணைக்கவும் உணவு விரயத்தைக் குறைக்கவும் சமூகக் கடை உதவுவதாக அவர் கூறினார்.
பூன் லே, மவுண்ட்பேட்டன் ஆகிய இடங்களில் உள்ள இரு கடைகளிலும் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் பொதுமக்கள் உணவுப் பொருள் நன்கொடைகளை வழங்கலாம்.
இந்தக் கடையின் குடும்பங்களுக்குத் தேவையான நேரத்தில் அவர்கள் விரும்பும் பொருட்களைத் தேர்வுசெய்யும் உரிமையை வழங்குகிறது என்று திரு லீ கூறினார்.