நரம்பியலிலும் பிற துறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயனுள்ள கற்றல் முறைகள், கருவிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆராய்ச்சி மையம் தேசிய கல்விக் கழகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையத்தில் கற்றல் அறிவியல் (சோலெக்) எனப்படும் இந்த மையம், கல்வி, அறிவியல் ஆகிய இரண்டின் புரிதல்களை ஒன்றிணைக்கும்.
மேலும் அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக கற்றலில் சிரமம் உள்ளவர்களுக்கு ஆய்வு, கல்வித் திட்ட வடிவமைப்புகளாக ஆக்கும்.
நரம்பியல், அறிவாற்றல் அறிவியல், உளவியல், தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த ஆய்வியல் அறிஞர்களை 'சோலெக்' ஒன்றிணைக்கிறது என்று நேற்று தேசிய கல்விக் கழகம் தெரிவித்தது.
இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், கற்றல் செயல்முறைகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் வெற்றிகரமான பள்ளி கற்றலுக்கு உதவும் வழிகளைப் பற்றிய சிறந்த புரிதலுக்கும் பங்களிக்கும் என்று கழகம் கூறியது.
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்டியு), தேசிய கல்விக் கழகத்தில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் இரண்டு சோதனை அறைகளையும் ஒரு வகுப்பறையையும் கொண்டுள்ளது.
"அனைத்து மாணவர்களின், குறிப்பாக கற்றல் சிரமங்கள் உள்ளவர்களின் மனித கற்றல் திறனைப் புரிந்துகொள்ள, மேம்படுத்திக் கொள்ள இப்போது வாய்ப்புக் கிடைத்துள்ளது," என்றார் இந்த புதிய மையத்தில் இயக்குநரான பேராசிரியர் டேவிட் ஹங்.
"மாணவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாக இருக்க இந்த மனித கற்றல் திறன் முக்கியமானது" என்றார் தேசிய கல்விக் கழகத்தின், கல்வி ஆராய்ச்சித் துறை தலைவருமான பேராசிரியர் ஹங்.
"கற்றலை ஊக்குவித்தல், கற்பித்தலை மாற்றியமைத்தல், ஆராய்ச்சியை மேம்படுத்துதல்" ஆகிய கல்விக் கழகத்தின் நோக்கத்தின் ஒரு பகுதி இந்த மையம் என்று தெரிவித்தார் தேசிய கல்விக் கழக இயக்குநர் கிறிஸ்டின் கோ.

