நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) முன்பு நன்யாங் பல்கலைக்கழகமாக இருந்தபோது, 21 வயது தாஹிர் 1973ல் வர்த்தகத் துறையில் பட்டம் பெறப் பயின்று வந்தார்.
அப்போது பள்ளி அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கியது. 48 ஆண்டுகள் கழித்து, வசதிகுறைந்த என்டியு மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொழிலதிபர் தஹிர் $1 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளார்.
நிரந்தரவாசியான தாஹிர், வெள்ளிக்கிழமை தமது 69வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், இந்த நன்கொடையை வழங்கியுள்ளதாக கூறப்பட்டது.
'பெடிகேப்' எனப்படும் மூன்று சக்கர ரிக்ஷாக்களைத் தயாரிப்பது தம் பெற்றோரின் வேலை என்று பகிர்ந்துகொண்ட தாஹிர், தந்தை உடல்நலமில்லாமல் போனதால் வியாபாரத்தில் உதவ தம் மருத்துவப் படிப்பைக் கைவிட வேண்டியிருந்ததாகக் கூறினார்.
அவருக்கு என்டியு முன்பு கைகொடுத்தது போலவே, தாம் வழங்கியுள்ள இந்த நன்கொடை, ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கு உதவும் என்று தாம் நம்புவதாக கூறினார்.
நிதிச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு, சொத்துச் சந்தை சார்ந்த நிறுவனங்களைக் கொண்ட இந்தோனீசியாவின் மிகப் பெரிய கூட்டு நிறுவனமான 'மாயாபடா குரூப்'பின் நிறுவனர் டாக்டர் தாஹிர்.
அவர் வழங்கியுள்ள $1 மில்லியனுக்கு இணையாக அரசாங்கமும் நிதியுதவி வழங்கும். மொத்தம் $2.5 மில்லியன் அறக்கட்டளை நிதித் தொகை கொண்டு, வசதிகுறைந்த என்டியு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். மாணவர் பரிமாற்றத் திட்டம் ஒன்றுக்கு டாக்டர் தாஹிர் 2018ல் $500,000 நன்கொடை வழங்கியிருந்தார்.
கொள்ளைநோய் தொடர்பில் நிதி நெருக்கடிக்கு ஆளான மாணவர்களுக்கு உதவச் சென்ற ஆண்டு கொவிட்-19 நிவாரணத் தொகுப்புத் திட்டம் ஒன்றை என்டியு அறிமுகப்படுத்தியது. திட்டத்திற்கு டாக்டர் தாஹிர் $10,000 வழங்கினார்.

