பிரதமர் லீ சியன் லூங் தொடர்பில் இணையச் செய்தி ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட வலைப்பதிவாளர் லியோங் ஸீ ஹியன் (கீழ்ப்படம்), இழப்பீடாக பிரதமருக்கு $133,000 தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மலேசியாவின் 1எம்டிபி பண மோசடியுடன் பிரதமர் லீயைப் பொய்யாகத் தொடர்புபடுத்தும் இணையச் செய்தி ஒன்றை 'தி கவரேஜ்' இணையத்தளம் வெளியிட்டிருந்தது. அதையடுத்து, திரு லியோங் அச்செய்தியைத் தமது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.
உண்மையைக் கண்டறிய எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் திரு லியோங் அவ்வாறு செய்திருப்பதாக நீதிபதி அய்டிட் அப்துல்லா தமது எழுத்துபூர்வ தீர்ப்பளிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
"அவதூறு வாசகங்களுக்கு மன்னிப்பு கோர மறுத்ததையும் வைத்துப் பார்க்கும்போது, தீய நோக்கம் தெரிகிறது," என்றார் நீதிபதி.
அவதூறு வழக்கு தொடர்பில் பிரதமர் லீயின் வழக்கறிஞர்கள் $150,000ஐ இழப்பீடாகக் கோரியிருந்தனர். முன்னதாக வலைப்பதிவாளர் ராய் ஙெர்ங் தொடர்பான அவதூறு வழக்கில் இத்தொகை வழங்கப்பட்டது.
இருப்பினும், திரு லியோங் தொடர்பான வழக்கில், அதே தொகையைத் தரவேண்டும் என்று தீர்ப்பளிக்க ஒரு குறிப்பிட்ட வரம்பு இருப்பதாக நீதிபதி கூறினார்.
"இந்த வழக்கில் காணப்படும் அவதூறு, நீதிமன்றத்திற்கு இதுவரை வந்த இதுபோன்ற வழக்குகளிலிருந்து மாறுபட்டது.
"செய்தி பொய் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அதைப் பிரதிவாதி பதிவேற்றம் செய்யவில்லை. அதோடு, தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் இருந்தும் தமது அவதூறு கூற்றுகள் உண்மை என்று பிரதிவாதி இறுதிவரை பிடிவாதமும் பிடிக்கவில்லை," என்றார் நீதிபதி அய்டிட்.
இந்நிலையில், செலவுகள் தொடர்பில் தாம் அதைத் தனியாகக் கையாளவிருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
இதையடுத்து, இவ்விவகாரம் நீதிபதியால் முடிவெடுக்கப்பட்டது என்றும் இது தொடர்பில் பிரதமர் லீக்கு மேற்கொண்டு கருத்து ஏதுமில்லை என்றும் பிரதமரின் ஊடகச் செயலாளர் சாங் லி லின் தெரிவித்தார்.

