வெளிநாட்டு ஊழியர் நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான திட்டங்கள் கட்டம் கட்டமாக நடப்புக்கு வரும் என்று கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான லாரன்ஸ் வோங் புதன்கிழமை தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களில் மேலும் பலருக்குத் தடுப்பூசி போடப்படுவதையும் கிருமித்தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அத்தகைய நடமாட்டக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளரும் என்றாரவர்.
மற்றவர்களைவிட வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏன் அதிக கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கின்றன என்றும் அவர்கள் எப்போது சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர் என்றும் செய்தியாளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்தபோது கல்வி அமைச்சருமான திரு வோங் இவ்வாறு கூறினார்.
குறிப்பிட்ட வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளைச் சேர்ந்தவர்கள் மாதம் ஒரு முறை சமூகத்துடன் கலந்துறவாட வகை செய்யும் ஒரு முன்னோடி திட்டம் சென்ற டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.
ஊழியர்கள் எந்த அளவுக்கு வழக்கமான பரிசோதனைகளுக்கு இணங்கி நடக்கிறார்கள் என்பதையும் இதர கட்டுப்பாடுகளை அவர்கள் எந்த அளவுக்குப் பின்பற்றி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அது இடம்பெறும்.
அந்த முன்னோடி திட்டம் தொடங்குவதற்கான கால நேர விவரங்களைப் பற்றி சிறப்புப் பணிக்குழு எதையும் தெரிவிக்கவில்லை.
வெளிநாட்டு ஊழியர்களிடையே கொவிட்-19 தொற்று சம்பவங்கள் கணிசமான அளவுக்குக் குறைந்து இருக்கின்றன. என்றாலும் அத்தகைய ஊழியர்கள் தங்கு விடுதிகளின் நிலவரங்கள் வேறுபட்டவை என்று அமைச்சர் கூறினார்.
ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டாலும் இதர பல ஊழியர்கள் வேகமாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அத்தகைய விடுதிகளில் அதிகம் என்பதை அவர் சுட்டினார்.
விடுதிகளில் ஊழியர்கள் நெருக்கமாக வசிப்பதைக் குறைக்க முயற்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. அதோடு மட்டுமின்றி பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் உள்ளன. இருந்தாலும் அங்கு கிருமி வேகமாக பரவும் ஆபத்து அதிகம் என்பதை அமைச்சர் விளக்கினார்.
சிங்கப்பூரில் இன்னமும் கொவிட்-19 கிருமி முற்றிலும் ஒடுங்கிவிடவில்லை என்பதால் விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள், பொதுமக்களுடன் தாராளமாக கலந்துறவாட அனுமதிப்பது ஆபத்தானது என்று பிபிசிக்கு மார்ச் 14ல் அளித்த பேட்டியில் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் நிலவரங்கள் மேம்படும்போது கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் என்றும் திரு வோங் தெரிவித்தார்.

