கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு எதிர்பாரா விதமாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்குப் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்தில் டிபிஎஸ் வங்கி 'சப் இன்சூரன்ஸ்' என்ற நிறுவனத்துடன் சேர்ந்து டிபிஎஸ்/ பிஓஎஸ்பி வாடிக்கையாளர்களுக்கு இலவச காப்புறுதி பாதுகாப்பை வழங்குகிறது.
'கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு' என்ற அந்தத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. தடுப்பூசி காரணமாக அல்லது கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அல்லது தீவிர கண்காணிப்பு தேவைப்பட்டால் அந்தத் திட்டம் கை கொடுத்து உதவும்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நாளுக்கு $100 என்ற விகிதத்தில் 14 நாட்களுக்கும் தீவிர கண்காணிப்புக்கு ஒரு நேர தொகையாக $1,000 என்ற கணக்கிலும் அத்திட்டம் செயல்படும்.
எதிர்பாரா மரணம் போன்ற நேரத்தில் $10,000 உதவித் தொகையை குடும்பத்தினர் பெறும் அம்சமும் இந்த இரண்டு ஏற்பாடுகளிலும் உண்டு. 14 நாள் பாதுகாப்புத் திட்டம் என்பது, ஒவ்வொரு முறை ஊசி போட்டுக்கொள்ளும் தேதியன்று அல்லது 2021 டிசம்பர் 31க்கு முன் தொடங்கும்.
இரண்டு தடுப்பூசிகளை அது உள்ளடக்கும். அதே வேளையில், விண்ணப்ப தேதியில் இருந்து 30 நாட்களுக்கு கொவிட்-19 பாதுகாப்பு செல்லுபடியாகும்.
18 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள சிங்கப்பூர்வாசிகள் தடுப்பூசி காப்புறுதி பாதுகாப்பு கேட்டு மார்ச் 25 முதல் ஏப்ரல் 30 வரை நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு டிபிஎஸ்- பிஓஎஸ்பி வங்கிக் கிளையிலும் இணையம் வழி விண்ணப்பிக்கலாம். இருந்தாலும் முந்தைய 14 நாட் களில் அவர்கள் வெளி நாட்டுக்குச் செல்லாமல் இருந்திருக்கவேண்டும். தொற்று அறிகுறி அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கவேண்டும்.
திட்டத்தில் சேர்கையில், அவர்களுக்கு பார்க்வே ஷென்டன் அளிக்கும் மருத்துவச் சேவைகளைப் பெறும் வாய்ப்பும் கிட்டும். இணையம் வழியிலான மருத்துவ ஆலோசனை, கொவிட்-19 பரிசோதனை, சுகாதாரப் பரிசோதனைகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
சிங்கப்பூரில் பணியாற்றும் இந்த வங்கியின் 12,000 ஊழியர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி காப்புறுதி பாதுகாப்பு கிடைக்கும்.

