உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று சூயஸ் கால்வாயில் சிக்கியதால், உலகின் முக்கியமான நீர்வழிப்பாதையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடையால், சிங்கப்பூருக்கும் இந்த வட்டாரத்திற்குமான விநியோகங்கள் தற்காலிகமாகப் பாதிக்கப்படக்கூடும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் நேற்று கூறியுள்ளார்.
விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால், கையிருப்பிலுள்ள சரக்குகளில் சிலவற்றை எடுக்கவேண்டி வரும் என்று திரு ஓங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
ஐரோப்பா, மத்திய கிழக்கில் இருந்து வரும் கப்பல்கள் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள நம்பிக்கை முனையைச் (கேப் ஆஃப் குட் ஹோப்) சுற்றி ஆசியாவுக்கு வருவது இதற்கு மாற்று வழி. ஆனால் இது ஒரு நீண்ட பயணம். இவ்வழியில் பயணம் செய்ய மேலும் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் ஆகும் என்றார் அவர்.
இடையூறு நீடித்தால், கப்பல் பாதைகள் மாற்றிவிடப்படும்போது சிங்கப்பூர் துறைமுக ஆணையம், இடையூறுகளைப் பட்டியலிடும். செயல்பாடுகள் சீராக இருப்பதை உறுதி செய்ய இது முன்னரே திட்டமிட வேண்டும் என்று திரு ஓங் கூறினார்.
கால்வாயில் சிக்கியுள்ள 400 மீட்டர் நீளமுள்ள, 224,000 டன் எடை கொண்ட 'எவர் கிவென்' சரக்குக் கப்பலை மீண்டும் நகர வைக்கும் முயற்சியில் இழுவைப் படகுகளும் தோண்டிகளும் தோல்வியுற்றன. அதிக காற்று, தூசிப் புயலுக்கு மத்தியில் கப்பல் பயணிக்கும் திறனை இழந்துவிட்டதாக சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது. கால்வாயை மீண்டும் திறக்க பல நாட்கள் ஆகக்கூடும் என்றும் அது கூறியது.
உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 10% இடம்பெறும் சூயஸ் கால்வாயுடன் அந்த வர்த்தகத்தின் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகளுடன் ஒப்பிட்ட திரு ஓங், இரண்டு நீர்வழிகளும் நெருக்கமாக இணைக்கப்பட்டு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியாவை இணைக்கின்றன என்றார்.
சூயஸ் கால்வாயில் ஏற்பட்டுள்ள இடையூறு, மத்திய விரைவுச் சாலைக்கு நடுவே பெரிய மரம் விழுவதைப் போன்றது. மத்திய விரைவுச்சாலையுடன் தொடர்புடைய ஒவ்வொரு விரைவுச்சாலையும் பாதிக்கப்படும் என்று அமைச்சர் ஓங் விளக்கினார்.
"தற்போது உலகம் எவ்வாறு நெருக்கமாக ஒன்றிணைந்துள்ளது என்பதை விளக்கும் மற்றொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் இது," என்று அவர் கூறினார்.

