சுற்றுச்சூழல் மீள்திறன் உள்ளிட்ட மூன்று அம்சங்களில் புதிய ஆராய்ச்சித் திட்டம் கவனம் செலுத்தும்
எம்சிசிஎஸ் கடல்துறை பருவநிலை மாற்ற அறிவியல் துறைக்கு $25 மில்லியன் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடல்நீர் மட்டம் உயர், கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பு, தீவிர சூறாவளி நிகழ்வுகள் போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க இந்த நிதி அத்துறைக்குப் பயன்படும்.
அத்துடன், அரசாங்கம் வழங்கும் இந்த நிதி தேசிய பூங்காக் கழகம் முன்னின்று நடத்தும் எம்சிசிஎஸ் ஆராய்ச்சித் திட்டத்திற்கும் கைகொடுக்கும். பல்வேறு அரசாங்க அமைப்புகள், ஆராய்ச்சிக் கழகங்கள், தொழிற்துறைப் பங்காளி நிறுவனங்கள் போன்றவையும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 'நகர நீடித்த நிலைத்தன்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி இணையக் கருத்தரங்கு 2021' என்னும் நிகழ்வு அது. இணையம் வழியாக முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் இந்தத் தொடர் கருத்தரங்கு ஓராண்டுக்கு நடைபெறும். பலதரப்பட்ட பணிகளை உள்ளடக்கிய இந்த ஆராய்ச்சித் திட்டம் மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தும். சுற்றுச்சூழல் மீள்திறன், சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் கடல்துறையில் பாதுகாக்கப்படும் கரிமம் (புளூ கார்பன்) போன்றவை அவை.
முதல் அம்சத்தில், கடல்துறை உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்கள் போன்றவற்றின் மீது பருவநிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான கடல்துறை சுற்றுச்சூழல் மீள்திறனை ேமம்
படுத்தக்கூடிய நடவடிக்கைகள் போன்றவற்றில் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகளின் மூலம் கடல்துறை மூலதனங்களைக் காக்க இப்பணி உதவி புரியும்.
அடுத்ததாக சுற்றுச்சூழல் பொறியியல் மீதான ஆராய்ச்சி, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பொருளியல் நடவடிக்கைகளை அடையாளம் காண உதவும். கடல் நீர் மட்டம் உயர்வும், ஆக்ரோஷமான சூறாவளி போன்றவற்றுக்கு எதிராகக் கடலோர வட்டாரத்தைப் பாதுகாக்க இத்தகைய பொருளியல் நடவடிக்கைகள் உதவும்.
இறுதியான ஆராய்ச்சி அம்சம் 'புளூ கார்பன்' மீதானது. கரிம வர்த்தகம் மூலம் சிங்கப்பூர் பொருளியலுக்கு உதவக்கூடிய கடல்துறை கரிமத்தை உருவாக்குவதன் மீது ஆராய்ச்சிப் பணி கவனம் செலுத்தும். 'புளூ கார்பன்' வர்த்தகம் இரு நோக்கங்கள் ஒரே நேரத்தில் நிறைவேற்றக்கூடியது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதோடு இயற்கைச் சுற்றுச்சூழலை இது பாதுகாக்கும் என்று திரு லீ குறிப்பிட்டார்.

