உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது தோழமைப் பிரச்சினைகளை எதிர்கொண்ட குமாரி எல்ஃபி சுஃபியாந்தி, அப்பிரச்சினைகளைக் கடந்து செல்ல 'கேர் சிங்கப்பூர்' அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உதவினார்.
இப்போது 26 வயதாகும் சுஃபியாந்தி, இளையர்களை நெறிப்படுத்தி, வழிகாட்டுவதற்காக இளையரை மையப்படுத்திய அறநிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.
இன்னொருவரின் மதியுரை தமக்கு எந்தளவிற்கு உதவியது என்பதை அறிந்துள்ளதால், இளையர்களுக்கு உதவும் மதியுரைத் திட்டத்தில் இன்னும் பலர் பங்கு கொள்வர் என்று குமாரி சுஃபியாந்தி நம்புகிறார்.
இளையர் துறையில் மதியுரைத்தலுக்கான தரத்தை மேம்படுத்தவும் இளையர்கள் தங்களது முழு ஆற்றலை வெளிப்படுத்தி சாதிக்கவும் உதவும் வகையில், மதியுரைத்தலில் பொதுவான வளங்களை உருவாக்கவும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஏதுவாக 'மதியுரைச் செயற்கூட்டணியை' கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் நேற்று அறிவித்தார்.
கடந்த ஜூனில் அரசாங்கத்திற்கும் தொழில்துறை நிறுவனங்களுக்கும் இடையே பங்காளித்துவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபின் அறிவிக்கப்பட்டுள்ள 20வது செயற்கூட்டணி இது.
இந்தப் புதிய மதியுரைச் செயற்கூட்டணி, மற்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி, தொண்டூழிய மதியுரைஞர் வளத்தையும் அவர்களுக்கான பயிற்சித் திட்டங்களையும் உருவாக்கும்.
இலாப நோக்கமற்ற 'சிங்கப்பூர் மதியுரைக் கூட்டணி' அமைப்பும் தேசிய இளையர் மன்றமும் தலைமையேற்கும் இம்முயற்சியில், 'கேர் சிங்கப்பூர்' போன்ற மற்ற நெறிப்படுத்தும் அமைப்புகளும் பங்கேற்கும்.
முன்வந்து, இளையர்களுக்கு வழிகாட்ட ஊக்குவிக்கும் வகையில், இளையர்களை நெறிப்படுத்த உறுதிமொழி ஏற்கவும் கடப்பாடு கொள்ளவும் ஏதுவாக afasingapore.org எனும் இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் முறைசார் மதியுரைத் திட்டங்களில் பங்கேற்பு குறைவாகவே இருந்து வருகிறது.
இவ்வாண்டு பிப்ரவரியில், 16 முதல் 34 வயதுக்குட்பட்ட 1,500 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வில், தங்களுக்கு உதவக்கூடிய அத்திட்டங்களில் 11 விழுக்காட்டினர் மட்டுமே பங்கேற்றது தெரியவந்தது.
அப்படி முறைசார் மதியுரைத் திட்டங்களில் பங்கேற்காதோரில் 63 விழுக்காட்டினர், அதைச் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
ஆயினும், முறைசார் மதியுரைத் திட்டங்கள் தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவு விழிப்புணர்வு இல்லை என்பதையும் அத்திட்டங்களில் தங்களுக்குப் பொருத்தமானது எது என்பது பற்றி குறைவாகவே தெரிந்து வைத்திருந்ததையும் அந்த ஆய்வு காட்டியது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட 'மில்யு இன்சைட்' எனும் பயனீட்டாளர் ஆய்வு நிறுவனம், தேசிய இளையர் மன்றத்திற்காக அந்தக் கருத்தாய்வை மேற்கொண்டது.
அத்தகைய மதியுரைத் திட்டங்களில் தங்களது செயல்திறனை வளர்த்துக்கொள்ள இங்குள்ள பல முகவைகளும் ஆர்வமாக உள்ளன.
நேற்று இடம்பெற்ற தேசிய மதியுரை உச்சநிலை மாநாட்டில் நிபுணர்கள், மதியுரைத்தல் தொழில்புரிவோர், கல்விமான்கள், மதியுரைத்தலில் ஆர்வமுள்ளவர்கள் எனப் பலரும் அதில் தங்களுக்குள்ள அறிவையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொண்டனர். டோபி காட்டில் உள்ள ஒய்எம்சிஏவில் நடந்த இந்நிகழ்ச்சியில் நேரடியாகவும் இணையம் வழியாகவும் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

