கொவிட்-19 இன்னமும் உலகத்தைவிட்டு ஒழியவில்லை. இருந்தாலும் அந்தக் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் இப்போதைக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் தடுப்பூசியை உலகம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உலக மக்கள் சமூகத்தில் கிருமி பரவாமல் தடுக்க வலுவான எதிர்ப்பு அரணை உரு வாக்க அரும்பாடுபட்டு வருகிறது.
இந்த இமாலய முயற்சியில் வெற்றி கிட்டுவதற்கான அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கி இருக்கின்றன.
சிங்கப்பூரில் பொறுப்புள்ள அரசாங்கமும் புரிந்துணர்வுமிக்க மக்களும் ஒன்றிணைந்து இடைவிடாமல் பாடுபட்டதால் கொவிட்-19 கிருமி ஏறக்குறைய கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. எல்லை கடந்து வரும் கிருமி இங்கே பரவுவதை தொடக்கத்திலேயே துடைத்தொழிக்க நூற்றுக்குநூறு செம்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் விளைவாக சிங்கப்பூரில் கடந்த இரண்டு வார காலமாகவே கொவிட்-19 சமூகத்தொற்று அவ்வளவாக இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலும் புதிதாக தொற்றுச் சம்பவங்கள் அவ்வளவாக இல்லை.
இத்தகைய ஒரு சூழலில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படக்கூடிய வாய்ப்பு விரைவில் கைகூடி வர இருக்கிறது. அடுத்த மாதம் முதல் அவை தளர்த்தப்படக்கூடும்.
வேலை இடங்களுக்குத் திரும்பும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் அதிகம் பேர் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று எல்லாம் வெளியாகும் செய்திகள் நம்பிக்கை தருபவையாக, வரவேற்கத்தக்கவையாக இருக்கின்றன.
ஆனாலும் கொவிட்-19க்கு முன்பு இருந்த சூழ்நிலை முழுமையாக இப்போதைக்குத் திரும்பாது என்பதை உறுதிபடக் கூறிவிடலாம். சமூக ஒன்று கூடல் நிகழ்ச்சிகளில் எட்டு பேர் வரைதான் கலந்துகொள்ளலாம் என்ற கட்டுப்பாடு தொடரும்.
முதலாளிகள் கூடுமானவரை அதிக ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி செய்வதே இன்னமும் அவசியமானதாகத் தெரிகிறது.
வேலையிடங்களில் கிருமித்தொற்று இடம்பெறாமல் தடுத்துவிட, கட்டுப்படுத்திவிட இயலும் என்பதே இதற்கான காரணம்.
முக்கால்வாசி ஊழியர்கள் வேலையிடத்துக்குத் திரும்பும் அளவிற்குக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட லாம் என்றாலும் அவர்கள் வேலை பார்க்கும் இடத்தின் சூழ்நிலை கொவிட்-19க்கு முன் இருந்தது போல் இருக்க இயலாது என்பது நடைமுறை தேவை.
முகக்கவசம், சமூகப் பாதுகாப்பு இடைவெளி எல்லாமே தொடரவேண்டிய நிலைதான் இருக்கிறது.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடியவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும் பட்சத்தில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக பரிசோதனை நடத்த வேண்டிய கட்டாயமும் இருக்கும். புதிதாக பிறப்பிக்கப்பட்டு இருக்கும் வழிகாட்டி நெறிமுறைகள், முதலாளிகளும் நில, கட்டட உரிமையாளர்களும் நிர்வாகிகளும் முக்கியமான பல காரியங்களைச் செய்வதைக் கட்டாயமாக்கும். இதற்கெல்லாம் அவர்கள் ஆயத்தமாக வேண்டும்.
இப்போது இருப்பதைவிட இன்னும் அதிகமான ஊழியர்கள் வேலையிடத்துக்குத் திரும்பும் வாய்ப்பு இருப்பதால் முதலாளிகள் பல கொள்கைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கும்.
இட வசதிகளை விசாலப்படுத்தி, வேலை இடங் களில் மருந்தடித்து, அப்போதைக்கு அப்போது அலுவலகம் சுத்தப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தி, சமூகப் பாதுகாப்பு இடைவெளியை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முதலாளிகள் செய்ய வேண்டி இருக்கும். அதேபோல கட்டட உரிமையாளர்கள் குளிர்சாதன வசதிகள், பொது இடங்கள், அதிகம் புழங்கும் இடங்கள் முதலான இடங்களைச் சுத்தப்படுத்தி கிருமித்தொற்றைத் தடுக்க வேண்டிய அவசியமும் இருக்கும்.
கட்டடங்களில் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் பரிசோதனைகள், வருகையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு, தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் எல்லாமே நடப்பில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் அதிகாரிகளின் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறை நிரந்தரமானதாக இராது என்பதால் அப்படியும் இப்படியுமாக ஊழியர்கள் வேலை பார்க்கும் நிலை ஏற்படும். முதலாளிகள் இதற்கு தங்களைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.
இதற்குத் தோதாக கொள்கைகளை அவர்கள் கவனமாக வடிவமைக்க வேண்டும். யார், எவர் வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டும்; எந்தெந்த பணிகளை நேரடியாகச் செய்ய வேண்டும் முதலான பலவற்றையும் முதலாளிகள் முடிவெடுக்க வேண்டி இருக்கும்.
வேலை இடங்களில் வேலை பார்க்கும் பாணியும் மாற்றங்களைக் காணவேண்டி இருக்கும்.
ஊழியர்கள் நேரடியாகச் சென்று வேலை பார்க்க வேண்டிய அவசியம் உள்ள உற்பத்தித் துறை போன்ற துறைகளைப் பொறுத்தவரை மாற்று வேலை நேர ஏற்பாடுகள் அதிகம் இடம்பெற வேண்டி இருக்கும். அதிக தானியக்கமயம் பயன்பட வேண்டும்.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, கொவிட்-19 மறுபடியும் தலைதூக்கினால் தன்னுடைய வழிகாட்டி நெறிமுறைகளை மாற்ற வேண்டி இருக்கும் என்று சுகாதார அமைச்சு எச்சரித்து உள்ளது.
மொத்தத்தில் இப்போதைய நிலவரங்களைப் பார்க்கும்போது மிகக் கவனமாக காய்களை நகர்த்தி பொருளியலைத் திறந்துவிடக்கூடிய அணுகுமுறை மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. பல நாடுகளில் கொவிட்-19 கிருமி மீண்டும் தலை எடுப்பதைப் போன்ற ஒரு நிலையை இங்கு நாம் அனுமதித்துவிடக்கூடாது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி செயல்திட்டம் சரளமாக நடந்து வருகிறது. படிப்படியாக அது விரிவுபடுத்தப்பட்டும் வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் அனைவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பாதுகாப்புடன் நடந்துகொண்டால் பொருளியலைத் திறந்துவிடுவதில் மேலும் மேலும் முன்னேறலாம்.

