சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர். மற்ற 22 பேரும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்களுக்கு தனிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
வெள்ளிக்கிழமையன்றும் புதிதாக ஒருவர் சமூகத்தொற்றுக்கு ஆளானார். அவர் மியன்மார் நாட்டைச் சேர்ந்த 26 வயது பணிப்பெண் ஆவார்.
மார்ச் 12க்குப் பிறகு வெள்ளிக்கிழமைதான் முதன்முதலாக ஒருவருக்கு சமூகத்தொற்று ஏற்பட்டது.
அந்தப் பணிப்பெண்ணுக்கு மார்ச் 23ஆம் தேதி இருமல் ஏற்பட்டது. மூக்கு ஒழுகியது. அன்றுதான் அவர் தன் முதலாளியின் வீட்டில் வேலை பார்க்கத் தொடங்கினார். அவர் அடுத்த நாள் பொது மருத்துவரைச் சந்தித்தார். அவருக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்தப் பணிப்பெண்ணுக்குத் தொற்று இருப்பதாக மார்ச் 25ஆம் தேதி தெரியவந்தது. அதையடுத்து மருத்துவ வாகனத்தில் அவர் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தேசிய பொது சுகாதார சோதனைக் கூடம் அவருக்கு மார்ச் 25ல் நடத்திய பரிசோதனையில் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. ஆனாலும் ரத்த சோதனை மூலம் தொற்று இருப்பது தெரியவந்தது. பணிப்பெண் தனிமை உத்தரவை நிறைவேற்றி வந்த போது நடத்தப்பட்ட சோதனையில் அவருக்குத் தொற்று இல்லை.
பணிப்பெண் ஜனவரி 23ல் மியன்மாரில் இருந்து இங்கு வந்தார். பிப்ரவரி 6 வரை தனி இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.
தனிமை உத்தரவை நிறைவேற்றிய பிறகு வெளிநாட்டு பணிப்பெண்களுக்கான விடுதி ஒன்றுக்கு அவர் மாற்றப்பட்டார். பிப்ரவரி 6 முதல் மார்ச் 23 வரை அந்தப் பெண் அந்த விடுதியிலேயே இருந்தார்.
இதனிடையே, நேற்று புதிதாக கிருமி தொற்றியவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,288 ஆகக் கூடியது. கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் 30 பேர் மரணமடைந்துவிட்டனர். தொற்று இருந்தும் இதர காரணங்களால் மாண்டவர்களின் எண்ணிக்கை 15 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

