ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா நெடுகிலும் அமையும்; இயற்கையோடு இணைந்து வாழ வகை செய்யும்
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா முழுவதும் நீண்டு செல்லும் வகையில் 15 கி.மீ. காட்டு உலாவழி இன்னும் 10 ஆண்டுகளில் அமைய இருக்கிறது. அப்பாதை கிழக்குக் கரையோர தோட்டங்களில் தொடங்கி சாங்கி நோக்கிச் செல்லும்.
குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ அந்தப் பாதை வழிவகுக்கும்.
சிகிச்சைத் தோட்டங்கள், இயற்கை விளையாட்டுக் கூடங்கள், பூங்காவில் இருக்கும் பல காட்டுப் பகுதிகள் ஆகியவற்றை அந்தப் புதிய பாதை இணைக்கும் என்று தேசிய பூங்காக் கழகம் நேற்று அறிவித்தது.
கடந்த சில ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ள 'பிக் ஸ்பிளாஷ்' இடம், முன்னாள் 'கோல்ட்கிஸ்ட் குடில்கள்' ஆகியவை உள்ளிட்ட பூங்காவின் பகுதிகளையும் அந்தப் பாதை இணைக்கும்.
காலப்போக்கில் சாத்தியமான இடங்களில் மக்களுக்குப் புதிய பாதைகளை உருவாக்கி இயற்கையுடன் அவர்களை இணைக்க வேண்டும் என்பதைச் சாதிக்கவே விரும்புகிறோம் என்று கழகத்தின் இயக்குநர் டான் ஜுன் சாவ் நேற்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 7.5 மில்லியன் வருகையாளர்களை ஈர்க்கும் சிங்கப்பூரின் ஆகப்பெரிய, மிகவும் பிரபலமான ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா இன்னமும் நகரப் பூங்கா என்றே கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதன் அனுபவமே வேறுபட்டதாக இருக்கும் என்றார் அவர்.
இதனிடையே, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'கோஸ்டல் பிளேகுரோவ்' என்ற விளையாட்டு இடமும் நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மவுண்ட்பேட்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் ஆகியோர் அங்கு மரம் ஒன்றை நட்டு அதைத் திறந்து வைத்தனர்.
அந்த இடம், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் 'பிக் ஸ்பிளாஷ்' இருந்த இடத்தில் 4.4 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு குடும் பங்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழிக்கும் வகையில் புதுமையான பல விளையாட்டு அனுபவங்களைத் தரக்கூடிய வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

