கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தன்னலம் பாராமல் பொதுநலத்தை முன்னிறுத்தி சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் அரும்பாடுபட்டு இருக்கிறார்கள் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் பாராட்டினார். சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் பணியாற்றும் பல பட்டத்தொழிலர்களும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் பணிகளில் அமர்த்தப்பட்டனர். பரிசோதனைக் கூடங்களில் பிரித்துவிடப்பட்டனர். இதர துறைகளிலும் அவர்கள் பொறுப்புகளை மேற்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். "கடந்த ஆண்டில் நம்முடைய பயணம் எளிதானதாக இல்லை. இருந்தாலும் மீள்திறனுடன் நாம் தொடர்ந்து இருந்து வருகிறோம். "ஒன்றாகச் சேர்ந்து பல சவால்களைச் சமாளித்து இன்றைய நிலையை எட்டி இருக்கிறோம்," என்று அமைச்சர் தெரிவித்தார். 'தரமிக்க சிங்கப்பூர் சுகாதாரச் சேவை விருதுகள்' வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 11வது ஆண்டாக நடந்த அந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 7,000 சுகாதாரப் பராமரிப்புத் துறை பட்டத்தொழிலர்களும் 38 அரசாங்க, தனியார் நிறுவனங்கள், சமூக மருத்துவமனைகள், சமூகப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த பங்காளிகளும் அங்கீகரிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். 17 பேருக்கு உச்ச செயல்வீரர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், சிங்கப்பூர் சார்பிலும் அமைச்சின் சார்பிலும் சுகாதாரத் துறையினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். சுகாதாரப் பராமரிப்புத் துறை ஆற்றலைப் பலப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்ச்சிப் பயிற்சியிலும் வேலை மறுவடிவமைப்பிலும் முதலீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் உறுதி கூறினார். இதனிடையே, உச்ச செயல்வீரர் கள் விருது பெற்றவர்களில் 61 வயது டாக்டர் எட்வின் லோ செங் டியும் ஒருவர். சிங்ஹெல்த் குழுமத்தின் வட்டார சுகாதாரத் துறை இயக்குநராக பதவி வகித்த இவர், சென்ற ஆண்டில் ஓய்வு பெற்று குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் ஓய்வு கழிக்க இருந்த நிலையில், கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பொறுப்பை ஏற்கும் படி அழைப்பு வந்தது. அதை தயங்காமல் ஏற்றுக்கொண்ட இந்த மருத்துவர், போர்க்களத்தைப் போன்று பல பணிகளை வேகமாக கவனிக்க வேண்டி இருந்தது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் உட்பட பலவற்றிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட இவர் பணியாற்றினார். ஏறத்தாழ 30 வாட்ஸ்அப் குழுக்களில் ஈடுபட்டு பல்வேறு தகவல்களையும் இவர் பகிர்ந்து வந்தார். விருதுபெற்ற மற்றொருவரான டாக்டர் ஷான் ஜெரால்டு நாதன், 32, செயின்ட் ஆண்ட்ரூஸ் சமூக மருத்துவமனையைச் சேர்ந்தவர். இவர் தாதிமை இல்லங்களில் பெருந்தொண்டாற்றினார். "கொவிட்-19 தொற்றின்போது சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் அனைவருமே செயல்வீரர் களைப் போலவே சேவையாற்றினார்கள்," என்றார் டாக்டர் நாதன்.
கொவிட்-19க்கு எதிரான போரில் உச்ச செயல்வீரர்கள்: சிறந்த தொண்டுக்கு விருது
2 mins read
குறிப்புச் சொற்கள்

