சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 26 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,347ஆக உயர்ந்தது. இந்த 26 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
சமூக அளவிலோ வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று அதன் முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
முன்னதாக, திங்கட்கிழமை கிருமி தொற்றியதாக அறிவிக்கப்பட்ட 21 பேரில் ஒரு வயது சிங்கப்பூர் குழந்தையும் அடங்கும். இந்தியாவிலிருந்து திரும்பிய அந்தக் குழந்தையைப் பரிசோதித்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டது.
எஞ்சிய 20 பேரில் இரு சிங்கப்பூரர்கள், மூன்று நிரந்தரவாசிகள் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இந்தியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், துருக்கி போன்ற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய சார்ந்தோர் அட்டை வைத்திருக்கும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், மியன்மார், பங்ளாதேஷ், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இங்கு வந்த 11 வொர்க் பெர்மிட் ஊழியர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 20 பேரில் அடங்குவர். இவர்களில் இருவர் வெளிநாட்டு பணிப்பெண்கள் என சுகாதார அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்தது.
குறுகிய கால வருகையாளர் அட்டையில் சிங்கப்பூர் வந்த மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவர் கனடாவிலிருந்தும் ஒருவர் இந்தியாவிலிருந்தும் வந்தவர்கள். மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த 34 வயது ஆடவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலிஸ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சு கூறியது. விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மருத்துவமனையில் 39 பேரும் சமூக வசிப்பிடங்களில் 121 பேரும் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரண மாக 30 பேர் உயிரிழந்துவிட்டனர்.

