அரசாங்க உதவித் திட்ட நிதியை மோசடி மூலம் பெற சூழ்ச்சி செய்து மூளையாகச் செயல்பட்டதற்காக 46 வயது ஆடவர் ஒருவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் $295,272 தண்டமும் இன்று (மார்ச் 31) விதிக்கப்பட்டன. தண்டத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 30 வார சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டி இருக்கும். எஸ்.சந்திரன் என்னும் அந்த ஆடவர் மாயாஜால வித்தை காட்டக்கூடியவர்.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் பிஐசி எனப்படும் உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்க உதவித் திட்டத்தின்கீழ் மோசடி வழியில் பணம் பெற மூன்று பேருக்கு சூழ்ச்சி செய்து உதவியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மூன்று குற்றச்சாட்டுகளைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்திரன் ஒப்புக்கொண்டார். இவருக்கு எதிரான மேலும் 55 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் வேறொரு தேதியில் கையாளும்.

