சூரிய ஒளியை நிலத்தடிக்கு அடியே உள்ள சுரங்கம் போன்ற இடங்களுக்குச் செலுத்தும் அறிவார்ந்த சாதனம் ஒன்றை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிஉள்ளனர்.
சூரிய வெளிச்சத்தைப் பூதக்கண்ணாடி கொண்டு ஓர் இடத்தில் குறிவைத்தால் அங்கு வெப்பம் அதிகரித்து நெருப்பு ஏற்படும். அதே அணுகுமுறையை இச்சாதனத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.
சாதனத்தை வடிவமைத்தவர்கள் உதவிப் பேராசிரியர் யூ சியோங்வூ மற்றும் ஆய்வாளர் டாக்டர் சாரு கொவெல்.
அவர்கள் உருவாக்கியுள்ள மாதிரி வடிவத்தின் எடை 10 கிலோ, உயரம் 50 சென்டிமீட்டர் என்று கூறப்பட்டது.
கடைகளில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களைக் கொண்டு தங்களின் சாதனம் உருவாக்கப்பட்டதாகவும் இதனால் அதை எளிதில் பெரிய வடிவில் உருவாக்கலாம் என்றும் பேராசிரியர் யூ தெரிவித்தார். சூரிய ஒளியின் முழு வீச்சை அதிகபட்சமாக நிலத்தடியின் இரண்டு மாடி ஆழம் வரை செலுத்தலாம் என்று கூறப்பட்டது.
தங்களின் சாதனத்திற்கு அவர்கள் பயன்படுத்திய கம்பிவடம், நெகிழியால் ஆனது. ஆனால், அதுவே கண்ணாடி இழைகளால் செய்யப்பட்டால், சூரிய வெளிச்சம் நிலத்தடியின் 10 மாடி ஆழம் வரை செல்லலாம் என்றார் டாக்டர் சாரு.
புதிய உள்கட்டமைப்பு, சேமிப்பு, பயன்பாட்டு இடங்களை நிலத்தடியில் உருவாக்கும் சாத்தியத்தை சிங்கப்பூர் அரசாங்கம் ஆராய்ந்து வரும் நிலையில், அத்தகைய நிலத்தடி இடங்களில் 24 மணி நேரமும் ஒளி இருப்பதன் தேவையை இந்த அறிவார்ந்த சாதனம் நிறைவுசெய்ய உதவும் என்றது என்டியு.

