கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுடன் சிங்கப்பூரில் மேலும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பர் என்ற நிலையில் 'என்எஸ்ஜி' எனப்படும் தேசிய பள்ளி விளையாட்டுகளில் இவ்வாண்டு பிற்பாதியில் கூடுதல் விளையாட்டுகள் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்றார் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங்.
என்எஸ்ஜியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று 'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் நடைபெற்றபோது திரு வோங் இதனைத் தெரிவித்தார்.
நிலவரத்தை ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து மறுஆய்வு செய்து வருவதாகவும் ஒரு சில பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைத் தளர்த்தும் சாத்தியம் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டின் விளையாட்டுகள் திங்கட்கிழமை தொடங்கி மே 27ஆம் தேதியன்று முடிவடையும். 29 விளையாட்டு வகைகளில் 12 மட்டுமே இம்முறை இடம்பெற்றுள்ளன. வழக்கமாக என்எஸ்ஜியில் கலந்துகொள்ளும் 60,000 மாணவ விளையாட்டுத் திறனாளர்களுக்குப் பதிலாக இம்முறை 12,000 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். பிறருடன் குறைந்த அளவு உடல் ரீதியான தொடர்பு ஏற்படுவது, போட்டி இடம்பெறும் இடங்களில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த போட்டியாளர்களிடையே குறைந்த தொடர்பு ஏற்படுவது ஆகியவற்றின் அடிப்படையில் விளையாட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
"விளையாட்டுகளை நாங்கள் மீண்டும் தொடங்கியிருந்தாலும் அதே பாணியில் அவை நடக்காது. மாற்றங்கள் செய்துள்ளோம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கூடுதல் மாற்றங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி உள்ளோம்," என்றார் திரு வோங்.
"சிங்கப்பூரில் கிருமித்தொற்று நிலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் நாம் இன்னும் நெருக்கடியிலிருந்து விடுபடவில்லை. சமூகத்தில் கிருமி இன்னும் உள்ளது, அது தொடர்ந்து குறைந்த அளவிலும் சமூகத்தில் பரவும் சாத்தியமும் அதிகம். அதனால் நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்," என்றார்.
ஓர் இடத்துக்குள் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு, பார்வையாளர்களை அனுமதிக்காத நிலை போன்ற பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் தற்போது என்எஸ்ஜியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாண்டு தொடக்கத்தில் உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்ததையும் விளையாட்டுகள் ஒத்திவைக்கப்பட்டதையும் அமைச்சர் வோங் நினைவுகூர்ந்தார். ஏற்கெனவே, என்எஸ்ஜி சென்ற ஆண்டு இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 1959ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சென்ற ஆண்டில் ரத்தும் செய்யப்பட்டது. உள்ளூர் கிருமித்தொற்றுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, கல்வியாளர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் உட்பட சமூகத்தினருக்குத் தடுப்பூசித் திட்டத்தைத் தீவிரப்படுத்தியதால் தேசிய பள்ளி விளையாட்டுகளை நம்பிக்கையுடன் தொடங்க முடிந்ததாகவும் திரு வோங் தெரிவித்தார்.

