அடுத்த 18 மாதங்களில் ஜூரோங் புத்தாக்க வட்டாரம் (ஜெஐடி), சுமார் 1,200 புதிய வேலைகளை உருவாக்கவுள்ளது. உயர்நிலை உற்பத்தி, நகர்ப்புற போக்குவரத்து, நகரத் தீர்வுகள் போன்ற துறைகளில் இவ்வேலைகள் அமைந்திடும் என்று கூறப்பட்டது.
தொழிற்சாலைகள் அவற்றின் செயல்பாடுகளை ஜெஐடி வளாகத்திற்கு மாற்றும்போது மேலும் 3,300 வேலைகளும் இடமாற்றம் காணும்.
இதன்படி ஜெஐடி வளாகத்தில் அக்குறிப்பிட்ட காலகட்டத்தில் மொத்தம் 4,500 வேலைகள் அமையவுள்ளன. ஜெஐடிக்கு மாறும் நிறுவனங்களில் நகர்ப்புற, உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சர்பானா ஜூரோங், உற்பத்தி ஆலையான ஷிமானோ ஆகியவை அடங்கும்.
ஜெஐடியில் அமைந்துள்ள சிங்கப்பூர் டெக்னோ சென்டருக்கு நேற்று வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லேங் சென்றிருந்தபோது இத்தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டிற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ 600 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் அந்த வட்டாரம், முழுமை அடைந்ததும் 95,000க்கும் அதிகமான வேலைகளை உருவாக்கித் தரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சேர்க்கை உற்பத்தி வசதிகளைப் பாதுகாப்பாக அமைப்பது, அவற்றைச் செயல்படுத்துவது, பராமரிப்பது போன்றவற்றின் தொடர்பில் புதிய தொழில்துறை வழிகாட்டுதல் தொகுப்பையும் நேற்று டாக்டர் டான் வெளியிட்டார். நம்பிக்கையான உற்பத்தி மையமாக சிங்கப்பூர் திகழ, இந்த வழிகாட்டுதல்கள் பங்காற்றும் என்றார் டாக்டர் டான்.
"இதுபோன்ற தரக் குறியீடுகளை உருவாக்குவதாலும் துறையினர் அனைவரும் அவற்றைப் பின்பற்றுவதாலும் நமது செயல்பாடுகள் அனைத்துலக அளவில் சென்றடையும். தரத்தை உறுதிசெய்வதிலும் தரக்குறியீடுகள் மிக அதிகமாக இருப்பதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம் என்பதை அறிவார்கள்," என்றார் அவர்.

