சமத்துவமின்மையைக் குறைப்பதற்குப் பொருளியல் வளர்ச்சியும் கல்வி முதலீடும் அதிமுக்கியம். யேல்-என்யுஎஸ் அனைத்துலக விவகாரங்கள் தொடர்பில் நேற்று இணையம் வழி நடைபெற்ற விரிவுரையில் இதுவே நிபுணர்களின் இறுதி முடிவாக இருந்தது.
கொவிட்-19 கொள்ளைநோயால் பெண்கள் மீது சமனற்ற ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டுப் பொறுப்புகள் அதிகரித்துவிட்டதால் கல்வியைக் கைவிடுவது, வேலையிலிருந்து விலகுவது போன்ற சூழல்களுக்குப் பெண்கள் ஆளாகின்றனர். வேலை செய்வது தொடர்பான ஏற்பாடுகளில் நீக்குப்போக்கு இருப்பது போன்ற கொள்கைகள் உதவியாக இருந்தாலும், நீடித்த பொருளியல் வளர்ச்சியும் கல்வி முதலீடுகளுமே எதிர்காலத்திற்கு மிக முக்கியமாக உள்ளன.
முடக்கநிலை, வர்த்தகங்கள் மூடல் போன்றவற்றால் உணவு பானம், சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு போன்ற சேவைத் துறைகளில் உள்ள பெண்கள் பலர், வேலையில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கடந்த கால பொருளியல் மந்தநிலைகளின் போது, பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் இம்முறை அப்படியல்ல என்றார் முன்னாள் உலக வங்கித் தலைமைப் பொருளியலாளரும் யேல் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியருமான பினெலோபி கோல்ட்பெர்க்.
குறைந்த வருமான நாடுகளில் முறைசாரா வேலைகளில் பெண்கள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றனர். ஆனால் முறையான வேலை ஒப்பந்தங்களின்றி இவர்கள் அரசாங்கத்தின் கண்ணுக்குத் தெரியாதவர்கள். அதனால், கொவிட்-19 நிவாரணத் திட்டங்களால் இவர்கள் பயனடையவும் முடியாது என்றார்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் இருப்பதுடன் குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் ஊழியரணியிலிருந்து வெளியேறும் நிலைமையில் உள்ள பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்றார் அவர். இருப்பினும் நீடித்த காலத்திற்குச் சமத்துவமின்மையைக் குறைக்க முக்கியமான ஓர் அம்சமாக விளங்குவது, பொருளியல் வளர்ச்சியே என்றார் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக அரசியல் பொருளியல் பேராசிரியர் டானி ரோட்ரிக்.
திறந்த அனைத்துலக பொருளியல் முறையைத் தக்க வைப்பது, வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை ஏற்கும் ஓர் உலகளாவிய பொருளியல் அமைவது, ஆலோசனைகள், தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்வது என்ற போக்கு வேண்டும் என்றார் அவர்.

