2,700 பேருக்கும் 1,000 வர்த்தகங்களுக்கும் பலனளிக்கும் புதிய நடவடிக்கை தொடக்கம்
சிங்கப்பூரில் உள்ள மாணவர்கள், வேலை தேடுவோர், வேலை செய்யும் நிபுணர்கள், சிறு வர்த்தக முதலாளிகள் போன்றோர் மின்னிலக்கச் சந்தைப்படுத்துதலுக்கான திறன்களை இலவசமாகப் பெறுவதற்கான திட்டம் ஒன்றை ஃபேஸ்புக் நேற்று தொடங்கியது.
இங்குள்ள 2,700 தனிப்பட்டவர்களுக்கும் 1,000 சிறிய நடுத்தர வர்த்தகங்களுக்கும் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்க 'ஃபேஸ்புக் சிங்கப்பூர்' திட்டம் வகுத்து உள்ளது. சந்தைப்படுத்துதலுக்கான அறிவியல், சமூக ஊடகத்தில் சந்தைப்படுத்துதல், வாடிக்கை
யாளர்களை ஈடுபடுத்தும் வகையில் சமூக ஊடக அம்சங்களை உருவாக்குதல் போன்றவற்றில் ஃபேஸ்புக் பயிற்சி அளிக்கும்.
இணையக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், இணையக் கலந்துரையாடல்கள், கற்றல் தளங்கள் போன்றவை மூலம் நான்கு பயிற்சித் திட்டங்கள் இடம்பெறும். ஃபேஸ்புக் மற்றும் தொழில்துறை நிபுணர்களும் இவற்றில் பங்கேற்று பயிற்சி வழங்குவர். இவற்றில் மூன்று திட்டங்களில் பங்கேற்று வெற்றிகரமாக பயிற்சியை முடிப்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
'எஸ்ஜிடெக்' எனப்படும் தொழில்நுட்பத் துறைகளின் சங்கத்துடன் ஃபேஸ்புக் பங்காளித்துவம் ஏற்படுத்தி பயிற்சித் திட்டங்களை வகுத்து வருகின்றது.
இதற்கு தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் மின்னிலக்கத் தொழில்துறை போன்றவை ஆதரவு வழங்கும். இவற்றில் சிங்கப்பூர் மின்னிலக்கத் தொழில்துறை என்பது பொருளியல் வளர்ச்சிக் கழகம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், ஐஎம்டிஏ ஆகியவற்றின் இணை அலுவலகம் ஆகும்.
புதிய திறன்வளர்ப்புத் திட்டத்திற்குத் தேவைப்படும் செலவு அனைத்தையும் ஃபேஸ்புக் ஏற்கும். இருப்பினும் அது எவ்வளவு என்று தெரிவிக்கப்படவில்லை.
இந்தப் புதிய நடவடிக்கை குறித்து தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார்.
"நாட்டின் எல்லாத் துறைகளிலும் மின்னிலக்கம், தொழில்நுட்பம் போன்றவற்றுக்கான தேவை வலுவாக இருக்கும் நேரத்தில் ஃபேஸ்புக்கின் திறன்வளர்ப்பு போன்ற நடவடிக்கைகள் அவசியமான ஒன்று," என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பரந்த பொருளியலுக்கான உருமாற்றம், வளர்ச்சி போனறவற்றின் உந்துசக்தியாக விளங்கும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத் துறை நமது நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் வியத்தகு வாய்ப்புகள் பலவற்றை வழங்க உள்ளது," என்றும் திரு ஈஸ்வரன் கூறினார்.

