மூன்றாண்டு சிறை, $295,272 அபராதம்
அரசாங்க உதவித் திட்ட நிதியை மோசடி மூலம் பெற சூழ்ச்சி செய்து மூளையாகச் செயல்பட்டதற்காக 46 வயது ஆடவர் ஒருவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் $295,272 தண்டமும் நேற்று விதிக்கப்பட்டன. தண்டத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 30 வார சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டி இருக்கும். எஸ். சந்திரன் (படம்) என்னும் அந்த ஆடவர் மாயாஜால வித்தை காட்டக்கூடியவர்.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் பிஐசி எனப்படும் உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்க உதவித் திட்டத்தின்கீழ் மோசடி வழியில் பணம் பெற மூன்று பேருக்கு சூழ்ச்சி செய்து உதவியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மூன்று குற்றச்சாட்டு
களைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்திரன் ஒப்புக்கொண்டார். இவருக்கு எதிரான மேலும் 55 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் வேறொரு தேதியில் கையாளும்.
உற்பத்தித்திறனையும் புத்தாக்கத்தையும் வளர்க்க உண்மையான முதலீடுகளை செய்யும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் ரொக்க உதவி அல்லது வரிக்கழிவுகளை வழங்குகிறது. ஊழியர்களுக்கான பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், தானியக்க இயந்திரம் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இத்திட்டத்தின்கீழ் ரொக்க உதவி பெறத் தகுதி பெறுவதற்கு நிறுவனங்கள் குறைந்தபட்சம் மூன்று உள்ளூர் ஊழியர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் நிபந்தனைகளில் ஒன்று.
'பேரடைஸ் கன்சல்டன்சி' என்னும் நிறுவனத்தை நடத்தி வந்த சந்திரன், திட்டத்திற்குத் தகுதி பெறாத சிலர் ரொக்க உதவி பெற உதவியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு மகேந்திரன் ராஜூ என்பவர் ரொக்க உதவி பெற்றார். எம் மிதுனா என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்க மகேந்திரனுக்கு சந்திரன் உதவினார். அந்நிறுவனத்தில் ஊழியர் யாரும் இல்லை என்று தெரிந்தும் போலியான கோரிக்கை மூலம் மகேந்திரன் ரொக்கம் பெற சந்திரன் தூண்டியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதே வழியில் மோசடியாக ரொக்க உதவி பெற இரண்டு பெண்களுக்கும் அவர் உதவினார். கடந்த 2017ஆம் ஆண்டு மகேந்திரன் தண்டிக்கப்பட்டார். $49,212 தண்டத்தொகையும் அதிகபட்சமாக $5,000 அபராதமும் செலுத்த அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரம் சாந்தி பெரியசாமி, கிறிஸ்டல் பிரியா ராகவன் என்னும் இரு பெண்களுக்கு நீதிமன்றம் நிபந்தனை எச்சரிக்கையை விடுத்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறிகிறது.
மோசடியாகப் பெற்ற தொகையில் பாதியை இம்மூவரும் சந்திரனுக்குக் கொடுத்ததாக அரசுத் தரப்பு வழிக்கறிஞரும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் வழக்கறிஞர்களும் கூறினர்.
சந்திரனின் குற்றங்கள் கண்டு பிடிக்கக் கடினமாக இருந்ததாக ஆணையத்தின் வழக்கறிஞர் நோர்மன் டியோ கூறினார். சந்திரன் தரப்பில் யாரும் வாதாடவில்லை. தம்மை நம்பியே குடும்பம் இருப்பதாகவும் சிறை சென்றுவிட்டால் தமது அன்புக்குரியவர்களுக்கு நிதி ஆதரவு இருக்காது என்றும் நீதிபதியிடம் சந்திரன் தெரிவித்தார்.
$200,000 பிணை அவருக்கு அனுமதிக்கப்பட்டது. தமக்கு எதிரான தண்டனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர் எண்ணியுள்ளதாக அறியப்படுகிறது.

