ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

2 mins read
b036514a-76e0-4d0e-b1e6-155fbf58e725
தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தாலும் இம்மாதத்தில் முதல் இரண்டு வாரத்துக்கு வெப்பம் சற்று அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வகத்தார் தெரிவித்துள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இம்மாதத்தின் முற்பகுதியில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் போன்ற மழைக் காலத்தில் அடிக்கடி மின்னல் தோன்றுவது சாதாரணமான நிகழ்வுதான் என்றும் வானிலை ஆய்வகத்தார் கூறியுள்ளனர்.

பெரும்பாலான நாட்களில் பிற்பகல் வேளையில் தீவின் சில பகுதிகளில் மிதமானதாகத் தொடங்கி கடும் மழையாகக் குறைந்த நேரத்துக்கு பெய்யும் என்றும் நேற்று முன்தினம் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

சில நாட்களில் இடியுடன் கூடிய மழை மாலை வேளையின் முன்னேரம் வரையிலும் நீடிக்கலாம்.

ஒரிரு நாட்களில் காலை வேளையில் கடும் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுமத்ராவிலிருந்து மலாக்கா நீரிணையைக் கடந்து வீசும் பலமான காற்றே அதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.

மொத்தத்தில், தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தாலும் இம்மாதத்தில் முதல் இரண்டு வாரத்துக்கு வெப்பம் சற்று அதிகமாக இருக்கும்.

பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நாட்களில் வெப்பநிலை 35 டிகிரிக்கும் உயரக்கூடும்.

பொதுவாக, ஆண்டின் வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஏப்ரல் கருதப்படுகிறது என்றும் வானிலை ஆய்வு நிலையம் கூறியது.

மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் வெப்பமான வானிலை பல நாட்களில் உணரப்பட்டாலும் அடுத்த இரண்டு வாரங்களில் பல நாட்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை தீவின் பல பகுதிகளில் குறிப்பாக மேற்குப் பகுதியில் அதிகம் பெய்தது.

காலை வேளையில் நிலவும் வெப்பமான வானிலையும் பலத்த காற்றும் பிற்பகலில் மழை பெய்ய காரணமாக இருந்தன என்றும் மார்ச் மாதத்தில் ஆக அதிகமாக மார்ச் 23ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்டில் 151.5 மில்லிமீட்டர் மழை பெய்தது என்றும் கூறப்பட்டது.