புளோக் 143 லோரோங் 2 தோ பாயோவில் நேற்று முன்தின இரவு பதின்மவயது பெண்கள் இருவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டனர்.
வழக்கத்திற்கு மாறான மரணம் ஏற்பட்டிருப்பது குறித்து அன்று இரவு 10.02 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் கூறியது.
“புளோக்கின் கீழ்த்தளத்தில் 15, 16 வயதில் இரு பெண்கள் அசைவின்றி கிடந்தனர். அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அவர்களின் மரணத்திற்குச் சந்தேகப்படும்படியாக சூது எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.
அந்த புளோக்கில் வசிக்கும் திரு ஸாங் என்பவர், தாம் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது அந்த புளோக்கின் கீழ்த்தளத்தில் போலிஸ் அதிகாரிகள் இருந்ததைத் தாம் கண்டதாக வான்பாவ் சீன நாளிதழிடம் கூறினார்.
“உயிரிழந்தவர்களில் ஒருவர் கறுப்புநிற டீ-சட்டையும் ஜீன்ஸ் காற்சட்டையும் அணிந்திருந்தார். அவரது தலையைச் சுற்றி ரத்தம் சூழ்ந்திருந்தது,” என்றார் திரு ஸாங், 40.
உயிரிழந்த அவ்விரு பெண்களும் நெருங்கிய நண்பர்கள் என்றும் அந்த புளோக்கில் இருந்து அவ்விருவரும் ஒரே நேரத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அவ்விருவரும் ஒரே மாதிரியான வளையல்களை அணிந்திருந்தனர். அந்த வளையல்களை போலிசார் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
அந்தப் பெண்களின் சடலங்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் அகற்றப்பட்டதாக வான்பாவ் நாளிதழ் தெரிவித்தது.