பரிந்துரைக்கப்பட்டுள்ள சாலைப் போக்குவரத்துச் சட்டத் திருத்த மசோதா சட்டமானால், சட்டவிரோத கார் பந்தயத்தை பிரபலப்படுத்துவோர் அல்லது அதில் பங்கேற்போர் அதிகமான அபராதம், இரண்டு மடங்கு கட்டாய சிறைத் தண்டனை போன்றவற்றை எதிர்கொள்வர்.
சாலையில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாகன ஓட்டிகளை வாகனம் ஓட்டுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றங்களுக்கு கூடுதல் அனுமதி வழங்கப்படும்.
கடந்த ஆண்டு சட்டவிரோத வேக பந்தய சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் இவை.
தற்போது, சட்டவிரோத ஓட்டப்பந்தய குற்றவாளிகள் அபராதம், கட்டாய சிறை, சம்பந்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்யப்படுதல் ஆகிய தண்டனைகளை எதிர்கொள்கின்றனர்.
முதல் முறை குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறை, $1,000 முதல் $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு ஓராண்டு வரை சிறை, $2,000 முதல் $3,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், முதல்முறை குற்றவாளிகள் அதிகபட்சம் $5,000 அபராதத்தையும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையையும் அனுபவிக்க நேரிடும். மீண்டும் குற்றம் புரிவோருக்கு $10,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
எனினும், இந்த திருத்தங்கள் சட்டவிரோத பந்தய குற்றங்களில் தற்போதைய வாகன பறிமுதல் முறையையும் மாற்றும். சட்டவிரோத ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடும் வாகனம் இனி தானாகவே பறிமுதல் செய்யப்படாது. குற்றவாளி, வாகன உரிமையாளர் அல்லாதபட்சத்திலும் உரிமையாளரின் அனுமதியின்றி வாகனம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது பறிமுதல் செய்யப்படாது.
இது ஆபத்தான வாகனம் ஓட்டுதல் போன்ற பிற மோசமான குற்றங்களுக்கு ஏற்ப பறிமுதல் நடைமுறையைக் கொண்டு வருகிறது.
பிப்ரவரியில் தஞ்சோங் பகாரில் ஐந்து பேர் கொல்லப்பட்ட அபாயகரமான அதிவேக கார் விபத்து, சட்டவிரோத ஓட்டப்பந்தயத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றை அடுத்து இந்த பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் வந்துள்ளன.
கடந்த ஓராண்டில் மட்டும், 26 பேர் சட்டவிரோத கார் பந்தயத்தில் ஈடுபட்டதாகப் போக்குவரத்து போலிஸ் தெரிவித்தது. 2015 ஆம் ஆண்டுமுதல் 2019ஆம் ஆண்டு வரை, 17 பேர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.
சாலையில் போக்குவரத்து சம்பவங்களில் நீதிக்கு இடையூறு விளைவிப்பது, மோட்டார் சைக்கிள் ஓட்டிகள், பின்னால் அமர்ந்துள்ள பயணி தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யத் தவறுவது போன்றவற்றையும் தண்டனைக்குரிய குற்றங்களாக மசோதா பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்தச் சட்ட திருத்தம் சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டவை என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
அனுமதிக்கப்பட்ட வேக வரம்பைத் தாண்டி வாகனம் ஓட்டும் குற்றச்செயலுக்கான அபராதமும் சிறைத் தண்டனையும், ஆபத்தான வகையில் வாகனத்தைச் செலுத்தி உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் தண்ட னைக்கு நிகராக அதிகரிக்கப்படலாம்.
சாலை விபத்து தொடர்பான குற்றங்களைப் புரிந்த ஓட்டுநருக்குப் பதிலாகப் பழியை ஏற்றுக்கொள்ளும் ஓட்டுநர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தகைய ஓட்டுநர்கள், வாகனம் ஓட்டுவதிலிருந்து தடை செய்யப்படக்கூடும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
மேலும், சாலைப் போக்குவரத்து சட்டம், விரைவுப் போக்குவரத்து அமைப்பு சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் போலிஸ் அதிகாரிகளுக்கும் ஏனைய "மூத்த அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கும்" பொது போக்குவரத்து பயணிகளிடம் விரைந்து சோதனை மேற்கொள்ள அதிகாரம் வழங்கும். நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின்படி, இது தனிநபர்கள் அணிந்துள்ள வெளிப்புற ஆடைகள் மீது விரைவாக கைகளால் நடத்தப்படும் சோதனையாகும்.
அத்தகைய மூத்த அங்கீகரிக்கப்பட்ட நபர்களில் சீருடையில் இருக்கும் துணை போலிஸ் அதிகாரிகள், ரயில் அல்லது பேருந்து நடத்துநர்களால் நியமிக்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்குவர். இத்தகைய சோதனைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் பயணிகள் பேருந்து, ரயில், பேருந்து நிலையம் அல்லது ரயில்வே வளாகத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்படலாம், மேலும் $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.