கொரோனா தொற்றுக் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சுற்றுப் பயணத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நான்கு புதிய சுற்றுலாத் தலங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள், கிளார்க் கீயில் சிலிர்ப்பூட்டும் 'ஸ்லிங்ஷாட்' எனும் சாகச விளையாட்டும் டெம்ப்சி வட்டாரத்தில் அமையவுள்ள ஐஸ்கிரீம் அருங்காட்சியகமும் இவ்வாண்டிறுதிக்குள் செயல்படத் தொடங்கும்.
செந்தோசாவில் அமையவுள்ள ஸ்கைஹெலிக்ஸ் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும். சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையைப் பார்வையிட உதவும் விதத்தில் தரையிலிருந்து 35 மீட்டர் உயரத்துக்கு பார்வையாளர்களைக் கொண்டு செல்லக்கூடிய சுழலும் தோணியாக அது இருக்கும். செந்தோசாவின் கேபிள் கார் நிலையத்துக்கு அருகில் இது அமையும்.
சாமர்செட் ஸ்கேட் பார்க், கிலினி ரோடு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள காலி இடத்தில் மற்றொரு புதிய சுற்றுலாத் தலமும் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது. கிறிஸ்மசை முன்னிட்டு அங்கு புதிய அலங்காரங்களுக்குத் திட்ட மிடப்படுகிறது.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த வருடாந்திர நிகழ்வான சுற்றுப்பயணத் தொழில்துறை மாநாட்டில் நேற்று இந்த அறிவிப்புகள் இடம்பெற்றன. இந்தப் புதிய திட்டங்கள் மூலம் சுற்றுப்பயணத் துறை பார்வையாளர்களை ஈர்க்க உதவும் என்று கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் திறக்கப்படவுள்ள சிங்கப்பூர் ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படும் அத்தகைய முதல் அருங்காட்சியகமாகும்.
இவ்வாண்டின் பிற்பாதியில் திறக்கப்படவுள்ள மற்றொரு சுற்றுலாத்தலம் 'ஸ்லிங்ஷாட்'. இது கிளார்க் கீயில் உள்ள 'ஜிஎக்ஸ்-5 எக்ஸ்ட்ரீம் ஸ்விங்' எனும் சாகச விளையாட்டுத் தளத்துக்கு அருகில் அமையும். இதற்கான கட்டணம் 'ஜிஎக்ஸ்-5 எக்ஸ்ட்ரீம் ஸ்விங்' சாகச விளையாட்டுக்கான கட்டணத்தை ஒத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.