நான்காம் தலைமுறை தலைமைத்துவப் பொறுப்பிலிருந்து துணைப் பிரதமர் ஹெங் விலகுவதன் விளைவு
நான்காம் தலைமுறை அமைச்சர்களுக்கான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தயார்நிலையை அடையும்வரை பிரதமர் லீ சியன் லூங் தமது பதவியில் நீடிப்பார் என்று முடிவாகியுள்ளது. துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தமது '4ஜி' தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் பதவியில் திரு லீ நீடிப்பது குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
பொறுப்பிலிருந்து விலகுவதாக திரு ஹெங் எடுத்துள்ள முடிவை நேற்று பிரதமர் லீ, "தன்னலமற்றது" என்று குறிப்பிட்டார்.
"சிங்கப்பூரின் சிறந்த செயல்பாட்டை மனதில் கொண்டு அவரது செயல்கள் அமைந்துள்ளன. அவரிடம் உள்ள பொதுச் சேவை உணர்வும் கடமை உணர்வுமே, 2011ல் தேர்தலில் நிற்குமாறு நான் சொன்னபோது அவரைக் களத்தில் இறங்க வைத்தது," என்றார் திரு லீ.
எதிர்பாராமல் நடந்த நிகழ்வுகள், தங்களது அடுத்த தலைமுறை திட்டங்களுக்கு ஒரு பின்னடைவு என '4ஜி' அறிக்கை குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பில் பிரதமர் லீயும், "4ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டதுபோல், நம் அடுத்த தலைமுறைத் திட்டங்களில் இது குறிப்பிடத்தக்க ஒரு பின்னடைவே," என்றார்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக திரு ஹெங் 2005 முதல் 2011 வரை பணியாற்றினார். 2011ல் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பணியிலிருந்து விலகினார். அதே ஆண்டு மே 18ஆம் தேதியன்று கல்வி அமைச்சராக திரு லீ அவரை நியமித்தார்.
அடுத்த தலைமுறைத் தலைவர்கள் குறித்த ஏற்பாடுகளைப் புதிதாக திட்டமிட வேண்டியுள்ளதால் தங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக '4ஜி' குழு கேட்டுக்கொண்டுள்ளது.
அவர்களின் நிலையை அறிந்து, புதிய 4ஜி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்கத் தயாராகும்வரை தாம் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்க சம்மதிப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.
சுகாதார, பொருளியல் நெருக்கடி மீது தனது உடனடி கவனத்தை அரசாங்கம் செலுத்தி வருவதற்கு இடையே, அடுத்த தலைமுறைத் தலைவர்கள் குறித்துத் திட்டமிடுவதும் ஒரு முக்கிய பணி என்றும் அதைத் தள்ளிப்போடுவது நல்லதன்று என்றும் அவர் சொன்னார்.
"முடிவு எடுப்பதற்கு 4ஜி குழுவுக்குச் சில மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் ஒருமித்த ஒரு முடிவுக்கு வந்து புதிய தலைவரை அடையாளம் கண்டுவிடுவர் என நம்புகிறேன். தேவை உள்ளவரை மட்டுமே நான் என் பொறுப்பில் நீடிக்க விரும்புகிறேன்," என்றார் திரு லீ.
பிப்ரவரி 2022ல் திரு லீ தமது 70வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.
இருப்பினும், கொள்ளைநோய் வந்து தாக்கிய பின்னர், கொவிட்-19 நெருக்கடியிலிருந்து சிங்கப்பூர் மீண்டுவரும் பயணத்தில் தாம் உறுதுணையாக இருப்பேன் என திரு லீ உறுதியளித்தார். அதன் பின்னரே, நாட்டின் பொறுப்பை அடுத்த தலைமுறைத் தலைவர்களிடத்தில் ஒப்படைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்பது, ஆட்களைத் தரவரிசைப்படுத்துவதும் அவர்களில் யார் சிறந்தவர் என்று முடிவெடுப்பதும் அல்ல என்பதை நேற்று அவர் வலியுறுத்தினார்.
"ஒரு குழுவை உருவாக்குவது, அதை மேம்படுத்துவது, குழு உறுப்பினர்களிடையே உறவுகளை வலுவாக்குவது முக்கியம். நாளடைவில் குழு உறுப்பினர்களில் எவர் ஒருவருக்கு மொத்த குழுவின் செயல்திறனை முழுமையாக வெளிக் கொண்டு வர முடியுமோ, குழுவில் ஒருமைப்பாடு நிலவச் செய்ய முடியுமோ அவரே தலைவராகும் தகுதியுடைவர்," என்றார் அவர்.
அடுத்த பொதுத் தேர்தல் வரையில் போதுமான கால அவகாசம் உள்ளதெனக் குறிப்பிட்ட திரு லீ, இந்த விவகாரம் குறித்து இப்போதே '4ஜி' குழு குரல் கொடுத்தது ஏற்றது என்றார்.
"சில ஆண்டுகள் நீடிக்கும் ஒரு செயல்முறையின் முதல் படி முடிந்துவிட்டது. அமைச்சர் தம் பொறுப்பிலிருந்து விலகுகிறார். இதையடுத்து, அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். பின்னர், 4ஜி குழு தங்களது உறவுகளையும் பொறுப்புகளையும் மாற்றியமைத்துத் திட்டமிட வேண்டும். அப்போதுதான் பழைய பொறுப்பிலேயே சிக்கியிருக்காமல் புதிதாக ஒருவர் உதித்தெழுவார்," என்றார் பிரதமர்.
வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அமைப்புமுறைகள் இருப்பதைத் தாம் அறிந்திருந்தாலும் சிங்கப்பூரில் உற்சாகம் நிறைந்த, இன்னும் அதிக ஆண்டுகள் சேவையாற்றக்கூடிய இளம் அமைச்சர் பொறுப்பேற்பது மட்டுமல்ல, ஒரு பிரதமரிடமிருந்து இன்னொரு பிரதமருக்கு, ஓர் அரசாங்கத்திடமிருந்து இன்னோர் அரசாங்கத்திற்குப் பொறுப்பை ஒப்படைக்கும் ஓர் அமைப்புமுறை வேண்டும் என்றும் சிங்கப்பூருக்கு நீண்டகாலத்திற்கு ஓர் உயர்தர அரசாங்கத்தை வழங்கும் ஓர் அமைப்புமுறை வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதையே தாமும் செய்ய விரும்புவதாக திரு லீ குறிப்பிட்டார்.
இந்நிலையில், சவால்களை எதிர்கொண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்த அமைச்சரவை தொடர்ந்து ஒன்றுபட்டு செயல்படும் என்று திரு லீ வலியுறுத்தினார்.