மேம்பாலம் இடிந்த வழக்கு: கட்டுமான நிறுவனத்துக்கு $1 மி. அபராதம் விதிக்க அரசுத்தரப்பு கோரிக்கை

2 mins read
91471ae1-d376-4b9f-a28c-ba62463bc798
60 நாள்­க­ளுக்கு வழக்கு விசா­ரிக்­கப்­பட்ட பிறகு, தீவு விரைவுச் சாலையில் மேம்பாலம் இடிந்ததில் ஆர் கிம் பியூ (ஓகேபி) கான்ட்­ராக்­டர்ஸ் நிறு­வ­னம் ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்யத் தவ­றி­யது கடந்த ஜன­வரி மாதத்­தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தீவு விரை­வுச்சாலை­யில் கட்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த மேம்­பா­லம் கடந்த 2017ஆம் ஆண்­டில் இடிந்த வழக்­கில், கட்­டு­மான நிறு­வ­னத்­துக்கு அதி­க­பட்­ச­மாக $1 மில்­லி­யன் அப­ரா­தம் விதிக்­கும்­படி அர­சுத் தரப்பு மாவட்ட நீதி­மன்­றத்தை நேற்று கேட்­டுக்­கொண்­டது.

வேலை­யிட பாது­காப்பு மற்­றும் சுகா­தா­ரச் சட்­டத்­தின்­கீழ், கட்­டு­மான நிறு­வ­னம் ஒன்­றின் விதி­

மீ­றல்­க­ளுக்­காக விரி­வு­ப­டுத்­தப்­பட்ட தண்­ட­னையை அர­சுத்­த­ரப்பு கோரு­வது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பு மற்­றொரு சம்­ப­வத்­தில் ஓகேபி நிறு­வன ஊழி­யர் ஒரு­வர் விழுந்து உயி­ரி­ழந்த நிலை­யில், அந்த நிறு­வ­னம் பாது­காப்பை உறுதி செய்­யா­த­தால், மீண்­டும் குற்­ற­மி­ழைத்­த­தற்காக ஓகேபி நிறு­வ­னத்­துக்கு அதி­க­பட்ச தண்­ட­னையை அர­சுத்­த­ரப்பு கோரி­யது.

"ஓகேபி நிறு­வ­னம் கவ­னத்­து­டன் செயல்­ப­டா­த­தால் பாலம் இடிந்து விழுந்­தது. இதற்கு முன்பு மற்­றோர் சம்­ப­வத்­தில் பாது­காப்­புக் குறை­பாடு இருந்­த­தால் தடையை எதிர்­நோக்­கிய அந்த நிறு­வ­னம் 'பாது­காப்­புக் குறை­பா­டில்­லாத வேலை­யி­டத்­தைக் கொண்­டி­ருக்க' அது உறுதி அளித்­தி­ருந்­தது.

"ஊழி­யர்­க­ளின் பாது­காப்­புக்கு அபா­யம் விளை­விக்­கும் விதத்­தில் பல பாது­காப்­புக் குறை­பா­டு­களை அந்த நிறு­வ­னம் அதிர்ச்­சி­யூட்­டும் விதத்­தில் புறக்­க­ணித்­தது," என்று குறிப்­பிட்ட அர­சுத்­த­ரப்பு, நிறு­வ­னத்­தின் நட­வ­டிக்­கையை 'கண்­மூ­டித்­த­ன­மா­னது' என்று குறிப்­பிட்­டது.

கடந்த 2015ஆம் ஆண்­டில் இயோ சூ காங் மேம்­பா­லத்­திற்­கு ­அ­ரு­கில் நிகழ்ந்த விபத்து ஒன்­றில் இந்­திய ஊழி­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். மேலும் மூவர் படு­கா­யம் அடைந்­த­னர். அந்த விபத்­தின் தொடர்­பில், பாது­காப்­புக் குறை­பா­டு­க­ளுக்­காக ஓகேபி நிறு­வ­னத்­துக்கு $250,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்ட மூன்று நாள்க­ளுக்­குப் பிறகு, அதா­வது 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி தீவு விரை­வுச்­சாலை மேம்­பால விபத்து நிகழ்ந்­தது.

முந்­தைய வழக்­கில் ஓகேபி நிறு­வ­னத்­தின் பங்கு இந்­தப் புதிய வழக்­கில் இருந்­து மாறு­பட்­டி­ருப்­ப­தால் விரி­வு­ப­டுத்­தப்­பட்ட தண்­ட­னையை அர­சுத்­த­ரப்பு கோர முடி­யாது என ஓகேபி நிறு­வ­னத் தரப்­பில் வழக்­க­றி­ஞர் வாதிட்­டார்.

பாலத்­தின் தற்­கா­லிக ஆத­ர­வுக் கட்­ட­மைப்­பு­களில் விரி­சல் இருப்­பது தெரிந்த பிற­கும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கா­மல் ஊழி­யர்­க­ளைப் பணி­யாற்ற அனு­ம­தித்த அந்­தத் திட்­டப் பணி­யின் இயக்­கு­நர் ஈ சீ கியோங், பொறி­யா­ளர் வோங் கியூ ஹாய் ஆகி­யோ­ரின் தண்­டனை பற்­றி­யும் நேற்று விவா­திக்­கப்­பட்­டது. இந்த விபத்­தில் ஊழி­யர் ஒருவர் உயி­ரி­ழந்­தார்; 10 பேர் காய­ம­டைந்­த­னர்.