தொகுதிக்குத் தொடர்ந்து சேவையாற்றுவோம் என்றும் ஈஸ்ட் கோஸ்ட் மசெக குழு உறுதி
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைப் பிரதிநிதிக்கும் தாமும் தமது குழுவினரும் வரும் ஆண்டுகளில் தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றப்போவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உறுதி தெரிவித்தார்.
சென்ற ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதாகவும் அவர் உறுதி கூறினார்.
மக்கள் செயல் கட்சியின் 4ஆம் தலைமுறைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக திரு ஹெங் வியாழக்கிழமை அறிவித்தார். அடுத்த நாள் தம் தொகுதியின் கட்சித் தொண்டர்களை அவர் சந்தித்தார். பிறகு பிடோக்கில் இருக்கும் கட்சித் தலைமையகத்தில் திரு ஹெங் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் வென்ற மக்கள் செயல் கட்சிக் குழுவில் பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான், துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெசிக்கா டான், ஷெரில் சான் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் முன்னதாக நடந்த கட்சிக் கிளைச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு கட்சித் தலைமையகத்திற்கு வந்தனர்.
கட்சி ஆர்வலர்களை மெய்நிகர் ரீதியாகச் சந்தித்த திரு ஹெங், எதுவுமே மாறவில்லை என்று அவர்களிடம் கூறினார். "ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மக்கள் தங்களுக்குச் சேவையாற்ற எங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
"துடிப்புமிக்க, பரிவுமிக்க, பசுமைமிக்க ஈஸ்ட் கோஸ்ட்டை பலப்படுத்த நாங்கள் பாடுபடுவோம் என்று உறுதி கூறி இருக்கிறோம்.
"நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாகச் சேர்ந்து தொகுதிவாசிகளுடன் இணைந்து செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்போம். எங்களால் முடிந்தவரை தொகுதி மக்களுக்குத் தலைசிறந்த சேவையாற்றுவோம்," என்று திரு ஹெங் தொண்டர்களிடம் தெரிவித்தார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் சென்ற ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி 53.41 விழுக்காட்டு வாக்குகளுடன் வெற்றிபெற்றது.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை தான் எடுத்தது ஏன் என்பதையும் திரு ஹெங் விளக்கினார்.
சிங்கப்பூர் எதிர்நோக்கும் கணிசமான சவால்களைச் சமாளிக்க ஏதுவாக இளைஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர், அதிக கால அனுபவத்துடன் பிரதமர் பதவியை ஏற்பதே நாட்டிற்குச் சிறந்ததாக, நன்மை அளிப்பதாக இருக்கும் என்பதைத் திரு ஹெங் மீண்டும் உறுதிபடக் கூறினார்.
தான் அளித்த விளக்கத்தையும் தனது முடிவையும் கட்சி ஆர்வலர் கள் புரிந்துகொண்டதாகவும் திரு ஹெங் குறிப்பிட்டார்.
4ஆம் தலைமுறையின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான விவாதிப்புகளில் ஈடுபடுவீர்களா என்று கேட்டபோது, தாம் தொடர்ந்து கூட்டங்களுக்குத் தலைமைத் தாங்கி தேசிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்க இருப்பதாகவும் தம் கருத்துகள், யோசனை களைத் தெரிவிக்க இருப்பதாகவும் திரு ஹெங் தெரிவித்தார்.
4ஆம் தலைமுறைக் குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் இந்த விவகாரத்தை தங்களுக்குள்ளாக விவாதித்து வருகிறார்கள் என்றும் அடுத்த வாரப் பிற்பகுதியில் அவர்களைத் தாம் சந்திக்க இருப்பதாகவும் திரு ஹெங் குறிப்பிட்டார்.
அடுத்த பிரதமராக பொறுப்பு ஏற்க ஒருவர் தயாராகும் வரையில் பிரதமர் பதவியில் திரு லீ சியன் லூங் தொடர்வார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக புதிய தலைவரை அடையாளம் கண்டுவிடலாம் என்று தாம் நம்புவதாக பிரதமர் திரு லீ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் அமைச்சரவை இன்னும் இரண்டு வார காலத்தில் மாற்றப்பட இருக்கிறது. அப்போது திரு ஹெங் தனது நிதி அமைச்சர் பதவியைக் கைவிடுவார். இருந்தாலும் துணைப் பிரதமராகவும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.
அதோடு, மசெகவின் முதலாம் உதவி தலைமைச் செயலாளராகவும் அவர் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருவார்.
அடுத்த நிதி அமைச்சராகப் பொறுப்பேற்க பொருத்தமானவர் யார் என்று கேட்டபோது, "அத்தகைய ஒருவர் பொருளியலில் மிகவும் நல்ல பின்னணியைக் கொண்டிருக்க வேண்டும்; முன்பு ஓர் அமைச்சை நிர்வகித்து நடத்தி இருக்கக்கூடிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்; இதர எல்லா அமைச்சர்களோடும் சேர்ந்து செயல்படக்கூடிய ஆற்றல் அவரிடம் இருக்க வேண்டும்," என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

