சிங்கப்பூரில் நேற்று புதிதாக 20 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவற்றோடு சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60, 653க்கு உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் ஊழியர் தங்குவிடுதியைச் சேர்ந்தவர். இதற்கு முன் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 28ஆம் தேதியன்று வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதியில் கிருமித்தொற்று பதிவானது.
எஞ்சிய 19 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் ஒருவருக்கு சமூக அளவில் கொவிட்-19 தொற்றியதாக உறுதி செய்யப்பட்டது.
குறுகிய கால வருகை அட்டையின் கீழ் சிங்கப்பூருக்கு வந்த 71 வயது இந்தியப் பெண்ணான அவர், டிசம்பர் 28ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். ஜனவரி 10ஆம் தேதி வரை தங்குமிட வசதி ஒன்றில் இவர் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவை நிறைவேற்றினார்.
வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவை நிறைவேற்றிய காலகட்டத்தில் ஜனவரி 8ஆம் தேதி சோதிக்கப்பட்டபோது அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 5ஆம் தேதி அந்த மாதுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மறுநாள் அவர் மருத்துவ சோதனைச் சென்றபோது அவருக்கு கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரல் 8ஆம் தேதி அவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தேசிய தொற்றுநோய் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். தேசிய பொது சுகாதார ஆய்வுக்கூடம் சென்ற வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கிருமித்தொற்று இல்லை என வந்தது. மேற்கொண்டு செய்யப்பட்ட ஊநீரியல் சோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.

