வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டுக் கடன் தவணைக் கட்டணம், வாடகைக் கட்டணங்களைச் செலுத்த முடியாத வீட்டு உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு, அந்தக் கட்டணங்களைத் தாமதமாகச் செலுத்துவதற்கு விதிக்கப்படும் கூடுதல் கட்டணம் இன்னும் ஆறு மாதங்களுக்கு அதாவது இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்தத் தகவலை தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைசால் இப்ராகிம் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
"பொருளியல் மீண்டுவரும் சூழலில் கொவிட்-19 தாக்கம் காரணமாக சில சிங்கப்பூர் குடும்பங்கள் தொடர்ந்து நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன," என்றார் அவர்.
உதவி தேவைப்படும் குடும்பங்களைக் குறிவைத்து உதவும் அரசாங்கத்தின் அணுகுமுறைஇது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை வீவக வீட்டுக் கடன் தவணைக் கட்டணம், வாடகைக் கட்டணங்களைச் செலுத்த முடியாதவர்களுக்கு, அந்தக் கட்டணங்களைத் தாமதமாகச் செலுத்துவதற்கு விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
மாதக் கடைசியில் எஞ்சியிருக்கும் தவணைத் தொகையின் அடிப்படையில் தற்போது ஆண்டுக்கு 7.5% என்ற விகிதத்தில் இந்தக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை 5,200க்கும் அதிகமான குடும்பங்கள் தங்களது வீட்டுக் கடன் தவணை, வீட்டு வாடகை செலுத்த முடியாததால் வீவக வழங்கிய நிதி உதவித் திட்டங்
களைப் பயன்படுத்தின.
கட்டணம் செலுத்துவதைத் தள்ளிவைப்பது, குறைந்த கட்டணம் செலுத்துவது, கடன் தவணைக் காலத்தை நீட்டித்து மாதாந்திர தவணைக் கட்டணத்தைக் குறைப்பது போன்ற திட்டங்கள் அவை.
அதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 4,000 குடும்பங்களுக்கு
வாடகையை வீவக குறைத்ததாகவும் டாக்டர் ஃபைசால் குறிப்பிட்டார்.
நிதிப் பிரச்சினையை எதிர்கொள்ளும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் உதவிக்காக அருகில் உள்ள வீவக கிளையை நாட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
வங்கிகளில் கடன் பெற்றுள்ள வீட்டு உரிமையாளர்கள் சிங்கப்பூர் நாணய ஆணையம் மற்றும் நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய விரிவுபடுத்தப்பட்ட ஆதரவுத் திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
சொத்துக் கடனுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை குறைவான தவணைக் கட்டணம் செலுத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.